மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகவே கருதவில்லை என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த அணியில் பிரச்சனைகள் பெரிய அளவில் இருப்பதை சுட்டிக் காட்டும் வகையிலும் இருந்தது அந்த சம்பவம்.
2024 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மூன்று போட்டிகளை சந்தித்து மூன்றிலும் தோல்வி அடைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதில் மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி தோல்வி அடைந்தது.

தோல்வி அடைந்த பின் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் வீரர்கள் யாரும் இல்லை. கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டுமே தனியாக இருந்தார். பொதுவாக ஒரு அணியின் வெற்றியோ, தோல்வியோ கேப்டன் மற்றும் பயிற்சியாளரை சுற்றியே வீரர்கள் இருப்பார்கள். ஆனால், தொடர்ந்து மூன்று போட்டியில் தோல்வி அடைந்ததோடு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில் உள்ள அதிருப்தி காரணமாக மும்பை அணியின் வீரர்கள் பலரும் வரை கைவிட்டு விட்டது போன்ற ஒரு பிம்பம் ஏற்பட்டது.
கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் அந்த அணியின் வீரர்கள் யாரும் பேச தயாராக இல்லை, அவர்கள் பாண்டியாவை கேப்டனாகவே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டியதாக முன்னாள் வீரர்கள் அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங் போன்றோர் குறிப்பிட்டு இருந்தனர்.
ஹர்திக் பாண்டியா தனியாக அமர்ந்து இருந்த போது அம்பத்தி ராயுடு அவர் அருகே சென்று அமர்ந்து அவருடன் பேசினார். அந்த வீடியோ பதிவை மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு இருக்கின்றனர். ஆனால், ஹர்திக் பாண்டியா மீது கரிசனம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு மெகா சீரியல் போல மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நாடகம் நடத்தி வருவதாக ரசிகர்கள் அந்த வீடியோ பதிவையும் விமர்சனம் செய்துள்ளனர்.