மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்து இருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் ஆடுவதே சந்தேகம் தான் என தகவல் வெளியாகி உள்ளது.
இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி போட்டு வைத்த மொத்த திட்டத்துக்கும் வேட்டு வைத்து இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. 2023 உலகக்கோப்பை தொடரின் போது கணுக்காலில் அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என கூறப்படுகிறது. அவர் ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் தொடரின் போது அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது அவர் அந்த தொடர் மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் ஆடுவதே சந்தேகம் என செய்திகள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் தான் பாண்டியாவை அணி மாற்றம் செய்த பின் அவரை அணியின் கேப்டனாக கொண்டு வர வேண்டி, ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் மிகப் பெரிய முடிவை எடுத்து இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதனால், கடும் எதிர்வினையை சந்தித்த நிலையில் தற்போது யாருக்காக இந்த கடினமான முடிவை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்ததோ, அவரே 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா 2015 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் இடம் பெற்று வருகிறார். எனினும், 2022 ஐபிஎல் தொடரில் அவர் அணி மாறி குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஆனார். அப்போது பாண்டியா அணியை விட்டு தன்னை நீக்குமாறு கேட்டுக் கொண்டதால் தான் மும்பை இந்தியன்ஸ் அவரை நீக்கியது என கூறப்பட்டது.
அதன் பின் இரண்டு ஆண்டுகள் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 2022 ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். பின்னர் 2023 ஐபிஎல் தொடரில் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதன் பின் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு இழுக்க முடிவு செய்து பெரும் தொகை கொடுத்து அவரை குஜராத் அணியில் இருந்து தங்கள் அணிக்கு டிரேடிங் செய்தது.
பாண்டியா தன்னை கேப்டனாக அறிவித்தால் தான் அணி மாறுவேன் என கூறியதையும் ஒப்புக் கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. அதை செய்ய வேண்டும் என்றால் பத்து ஆண்டுகள் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மாவை நீக்க வேண்டும். பாண்டியா தான் எதிர்காலம் எனக் கருதிய மும்பை அணி அதையும் செய்தது.
ஆனால், ஹர்திக் பாண்டியா கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையவில்லை என கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கு முன் அவர் முழு அளவில் தயாராவார் என்றே இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு மாறான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியா 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலையில், வேறொரு கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் மும்பை இந்தியன்ஸ் அணி.
ஒன்று முந்தைய கேப்டன் ரோஹித் சர்மாவிடமே மீண்டும் செல்ல வேண்டும் அல்லது பும்ரா, சூர்யகுமார் யாதவ் என கேப்டனாக வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கும் அடுத்தகட்ட வீரர்களை கேப்டனாக நியமிக்க வேண்டும். என்ன செய்யப் போகிறது மும்பை இந்தியன்ஸ்?