மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதால் ரோஹித் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். இதுவரை நடந்த சம்பவங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு அடுத்த போட்டியில் எதிர்ப்பு உச்சக்கட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளும் அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் நடந்தன. அடுத்து திங்கள்கிழமை அன்று மும்பை இந்தியன்ஸ் ஆட உள்ள போட்டி அந்த அணியின் மைதானமான மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

மும்பையில் ரோஹித் சர்மாவுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை பார்த்த அந்த ரசிகர்கள் தற்போது ஹர்திக் பாண்டியாவை ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. ஹைதராபாத்தில் கூட ஹர்திக் பாண்டியாவுக்கு அதிக எதிர்ப்பு கிளம்பியது. மும்பை வான்கடே மைதானத்தில் அதை விட பல மடங்கு அதிக எதிர்ப்பு கிளம்பும்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா அதை ஒதுக்கித் தள்ளி விட்டு தான் தனது பணியை செய்ய வேண்டி இருக்கும். ஏற்கனவே, இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்துள்ளது. அதனால் கடும் அழுத்தத்தில் இருக்கிறார் பாண்டியா. மும்பை அணியின் புதிய கேப்டனாக இரண்டு தோல்விகள், அணியில் இருக்கும் மூத்த வீரர்களின் அதிருப்தி, ரசிகர்களின் எதிர்ப்பு ஆகியவற்றை தாண்டி தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் மைதானமான வான்கடேவிலேயே கடும் எதிர்ப்பை சந்திக்க இருக்கிறார் ஹர்திக் பாண்டியா.
மும்பை வான்கடேவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் ரசிகர்கள் எதிர்ப்பை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இந்தப் போட்டியிலும் தோல்வி அடைந்தால் ஹர்திக் பாண்டியா மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவார். எனவே, இந்தப் போட்டி ஒரு மினி கிளைமாக்ஸ் ஆக மாறி உள்ளது.