கொல்கத்தா : சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தோனி பிரசித்த பெற்ற Process என்ற வார்த்தையை வைத்து கவுதம் கம்பீர் பேசியுள்ள கருத்து சென்னை அணி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்காக விளையாடிய காலம் முதலே தோனி - கவுதக் கம்பீர் இடையிலான மோதல் ரசிகர்கள் அறிந்த ஒன்று தான். எப்போதெல்லாம் தோனியை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுகிறார்களோ, அப்போதெல்லாம் கவுதம் கம்பீர் சர்ச்சையை கருத்துகளை கூறி வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக தோனி மீதான வன்மத்தை வெளிப்படுத்துவதை கம்பீர் குறைத்துவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணியின் ஆலோசகர் பதவிக்கு வந்த பின் தோனியின் சாதனைகளை பற்றி பெருமை கொள்வதாக தெரிவித்தார். அதேபோல் களத்திலும் தோனியுடன் நட்பு பாராட்டுவதை கம்பீர் வழக்கமாக கொண்டார். இந்த நிலையில் மீண்டும் தோனியையும் சிஎஸ்கே ரசிகர்களையும் கவுதம் கம்பீர் வம்புக்கு இழுத்துள்ளார்.
கேகேஆர் அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில், என்னை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் முடிவுகள் எனக்கு மிகவும் முக்கியம். வழக்கமாக சிலர், "Process" என்று சொல்வார்கள். பயிற்சி, கள செயல்பாடு ஆகியவற்றை சரியாக செய்தால், முடிவுகள் சாதகமாக வரும் என்று கூறுவார்கள். எனக்கு அதுபோன்ற வார்த்தைகளில் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை.
ஏனென்றால் கொல்கத்தா அணியின் ரசிகர்கள் கேகேஆர் அணி வெற்றிபெறுவதை பார்க்க தான் மைதானத்திற்கு வருகிறார்கள். அதனால் எனக்கு ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியம். என் ஆழ்மனதில் இருப்பது இதுதான். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை கேகேஆர் அணியின் ரசிகர்கள் தான் மிகவும் விஸ்வாசம் மிக்கவர்கள். ஏனென்றால் கேகேஆர் அணியின் வரலாற்றை பார்த்தால், முதல் 3 சீசன்களில் மிகப்பெரிய சறுக்கல்களை பார்த்துவிட்டார்கள்.
அப்போது கொல்கத்தா அணி மீதும், வீரர்கள் மீதும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். அணியின் ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் ரசிகர்கள் உடனிருந்தார்கள் என்று தெரிவித்துள்ளார். கேகேஆர் அணி 4 சீசன்களுக்கு பின் 2012 மற்றும் 2014 ஆகிய சீசன்களில் கோப்பையை வென்றது. வெறும் 4 சீசன்களுக்கே இப்படி பேசுகிறார் என்றால், ஆர்சிபி அணி ரசிகர்கள் 17 சீசன்களாக அந்த அணிக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
சிஎஸ்கே அணி 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் தடைபெற்ற போதும் ரசிகர்கள் எங்கும் செல்லவில்லை. இதனால் கவுதம் கம்பீரின் கருத்து பல்வேறு அணிகளின் ரசிகர்களையும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தோனியை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்துள்ளதால், சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கம்பீரை பொளந்து கட்டி வருகின்றனர்.