சென்னை : ரசிகர்கள், விமர்சகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எப்போதும் கவலை கொண்டதில்லை என்று ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக்கின் பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது. 6 சீசன்களில் முதல்முறையாக ரியான் பராக் பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்டுள்ளார். இதில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடிய ரியான் பராக் 573 ரன்களை விளாசி, அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

இதனால் ராஜஸ்தான் அணியால் அடுத்தடுத்த சீசன்களிலும் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியான் பராக் மெகா ஏலத்திற்கு வந்தாலும், ரைட் டூ மேட்ச் கார்டு மூலமாக ராஜஸ்தான் அணி மீண்டும் ரியான் பராக்கை வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் ரியான் பராக் பேசுகையில், எனது பேட்டிங் குறித்து உண்மையில் திருப்தி ஏற்படவில்லை.
நல்ல சீசனாக அமைந்தாலும், சில போட்டிகளை ராஜஸ்தான் அணிக்காக முடித்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சரியான நேரத்தில் ஆட்டமிழந்து வெளியேறினேன். இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கடைசி வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் விளையாட வேண்டும். கிரிக்கெட் என்பதே குழுவாக இணைந்து விளையாடி வெல்வது தான். நானும் சஞ்சு சாம்சனும் மட்டுமே ரன்களை சேர்ப்பதால், வெற்றிபெற முடியாது.
நாங்கள் அடிக்கும் ரன்கள் அணிக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் சில போட்டிகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இருந்தாலும் நம்பர் 3ல் முடித்தது மகிழ்ச்சி தான். அசாம் அணிக்காக கடந்த 3 ஆண்டுகளாக நம்பர் 4 வரிசையில் பேட்டிங் ஆடி வருகிறேன். இந்த சீசனில் நம்பர் 4 வரிசையை எனக்கு ராஜஸ்தான் அணி வழங்கியது. இதனால் எனக்கும் அதிக நம்பிக்கை கிடைத்தது. தோல்வியில் இருந்து வெளி வருவது எனக்கு எளிது தான்.
ஏனென்றால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எப்போதும் எனக்கு கவலையில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய அணியில் நான் விளையாட மாட்டேன் என்று பலரும் கூறி வந்தார்கள். ஆனால் இப்போது ரியான் பராக்கை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒரு கட்டத்தில் இந்திய அணிக்காக நிச்சயம் விளையாடுவேன் என்று எனக்கும் தெரியும். அதற்கு 6 மாதமோ அல்லது ஒரு ஆண்டோ ஆகலாம் என்று தெரிவித்துள்ளார்.