மும்பை : சர்பராஸ் கான் தந்தை நெளஷத் கானுடன் இணைந்து விளையாடி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக இளம் வீரர் சர்பராஸ் கான் அறிமுகம் செய்யப்பட்டார். ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக ஆயிரக்கணக்கான ரன்களை விளாசிய போது, சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே சர்பராஸ் கானுக்கு டெஸ்ட் கேப் வழங்கினார். அப்போது சர்பராஸ் கானுக்கு டெஸ்ட் அறிமுக கேப் வழங்கியதை கண் கலங்கி பார்த்து கொண்டே இருந்த நெளஷத் கான், அந்த கேப்பை கைகளில் கொடுத்த போது, அதற்கு முத்தம் கொடுத்து ஆனந்த கண்ணீர் சிந்தினார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது மறக்க முடியாத தருணமாக மாறியது.
இதன்பின் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சர்பராஸ் கான் விளையாடி 3 அரைசதங்களை விளாசி அசத்தினார். இதன் மூலமாக இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சர்பராஸ் கான் உயர்ந்துள்ளார். அதேபோல் சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானும் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் பொளந்து கட்டினார். யு19 உலகக்கோப்பை தொடரில் அசத்திய முஷீர் கான், ரஞ்சி டிராபி இறுதியில் சதம் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மும்பையை சேர்ந்த சகோதரர்கள் இணைந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். இந்த நிலையில் ட்ரீம் லெவன் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ரோகித் சர்மா கலந்து கொண்டார். அப்போது சர்பராஸ் கான் குறித்து ரோகித் சர்மா பேசுகையில், இந்திய அணிக்காக இளம் வீரர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்பட்ட போது, எனக்கும் எமோஷனலான தருணமாக அமைந்தது.
அவர்களின் குடும்பத்தினரும் அருகில் இருந்தனர். அந்த தருணமே உணர்வுப்பூர்வ ஒன்றாக அமைந்தது. அதிலும் சர்பராஸ் கான் அறிமுகமான போது மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் சர்பராஸ் கான் தந்தை நெளஷத் கானுடன் நான் இளம் வயதில் கங்கா லீக்கில் விளையாடி இருக்கிறார். அவர் இடதுகை பேட்ஸ்மேன். அதிரடியாக விளையாட கூடியவர்.
மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் நெளஷத் கானை தெரியாதவர்களே இருக்க முடியாது. சர்பராஸ் கான் இந்திய அணிக்காக விளையாடியதன் மூலமாக நெளஷத் கானின் கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது. சர்பராஸ் கான் டெஸ்ட் கேப் அவருக்கு எவ்வளவு சொந்தமோ, அதே அளவிற்கு அவரின் தந்தைக்கும் சொந்தம் என்று அப்போது கூறியதாகவும் தெரிவித்தார்.