கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கின் ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதாக வரும் விமர்சனங்களுக்கு அவரே பதில் அளித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் மாற்று வீரராக அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளார். கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங், முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கோப்பையை வென்ற பின் ரிங்கு சிங் தீவிரமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணிக்காக விளையாடினாலும் ரிங்கு சிங்கின் ஐபிஎல் சம்பவம் ரூ.55 லட்சம் என்பது ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது. ரிங்கு சிங்கின் திறமைக்கு ரூ.10 கோடிக்கு மேல் ஐபிஎல் தொடர் மூலம் வருவாய் பெற முடியும் என்று கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ரிங்கு சிங் மனம் திறந்துள்ளார்.
ரிங்கு சிங் பேசுகையில், நான் கிரிக்கெட் விளையாட தொடங்கும் போது இவ்வளவு தொகை ஊதியம் பெறுவேன் என்று கூட நினைக்கவில்லை. சிறுவயதில் ரூ.10 அல்லது ரூ.5 தேவையென்றால், எப்படியோ அதனை சம்பாதித்து கொள்வேன். ஆனால் இப்போது ரூ.55 லட்சம் சம்பாதிக்கிறேன். என்னை பொறுத்தவரை, இது எனக்கு அதிகமான தொகை தான். கடவுள் எனக்கு கொடுத்ததை வைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
என்னால் இவ்வளவு பணம் பெற்றிருக்க வேண்டும் என்று கூட சிந்திக்க முடியவில்லை. எனக்கு ரூ.55 லட்சம் ஊதியம் பெறுவதே மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் பணம் இல்லாத போது பணத்தின் அருமையை அறிந்தவன் நான். என்னை பொறுத்தவரை பணம், புகழ் எல்லாமே மாயா தான். நாம் இங்கு பிறக்கும் போது எதுவும் கொண்ட வருவதில்லை. செல்லும் போதும் எதையும் கொண்டு செல்வதில்லை.
நமக்கான நேரம் எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. என்னை பொறுத்தவரை, எவ்வழியாக வந்தோமோ அதே வழியில் நாம் திரும்ப செல்ல வேண்டும். அதனால் தன்னிலை அறிந்து தரையில் தான் எப்போதும் நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ரிங்கு சிங்கின் வார்த்தைகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.