லக்னோ : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததற்கு மயங்க் யாதவின் பவுலிங் தான் காரணம் என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி க்ருனால் பாண்டியா மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பவுலிங் செய்த சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 50 பந்துகளில் 70 ரன்களையும், பேர்ஸ்டோவ் 42 ரன்களையும் சேர்த்தனர். லக்னோ அணி தரப்பில் அறிமுக வீரர் மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 12 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலமாக பஞ்சாப் அணி 2வது தோல்வியை பெற்றுள்ளது. இந்த தோல்வி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், லக்னோ அணி சிறப்பாக விளையாடியது. எங்களின் அணியின் லிவிங்ஸ்டன் காயமடைந்தது பின்னடைவாக மாறியது. ஏனென்றால் நம்பர் 4ல் அவரை களமிறக்க திட்டமிட்டோம். ஆனால் மயங்க் யாதவ் மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அவரின் ஸ்மார்னஸ் ஆச்சரியமாக உள்ளது.
மயங்க் யாதவ் வேகத்தின் மூலம் என்னை சர்ப்ரைஸ் செய்துவிட்டார். அனுபவ வீரராக அந்த வேகத்தை இதற்கு முன் விளையாடி இருக்கிறேன். ஆனால் அவர் சரியாக எனக்கு எதிராக யார்க்கர் பந்துகளை வீசி டாட் பால் மற்றும் ரன்களை கட்டுப்படுத்தியது ஆச்சரியமளிக்கிறது. இதனை சிந்தித்து சக பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை கொடுத்தேன். மைதானத்தின் அருகில் இருக்கும் பவுண்டரியை பயன்படுத்துமாறு கூறினேன். ஆனால் பிரப்சிம்ரன் சிங்கின் உடல் பகுதியில் பவுலிங் செய்து விக்கெட் வீழ்த்தினார்.
அதன்பின் ஜித்தேஷ் சர்மா வந்த போது, மயங்க் யாதவை அட்டாக் செய்ய வேண்டாம் என்று கூறினேன். அவருக்கு பதிலாக மற்ற பவுலர்களை அட்டாக் செய்யலாம் என்றேன். ஆனால் அவர் ஏற்படுத்திய பிரஷர் அபரிவிதமாக அமைந்தது. இந்த போட்டியை நிச்சயம் அமர்ந்து அனாலிஸிஸ் செய்ய வேண்டும். அதேபோல் எங்களின் ஃபீல்டிங்கிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சரியான திட்டத்துடன் வந்தாலும், அதனை சரியாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.