சென்னை : ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் சோசியல் மீடியா பதிவு ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் கேப்டனாக கோப்பையை வென்ற 5வது இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். பிசிசிஐ ஒப்பந்தத்தில் வெளியேற்றப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் கைகளில் இருந்தே கோப்பையை வாங்கி தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.

அதேபோல் தோல்வியின் போதும், சறுக்கலின் போதும் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல், ஐபிஎல் தொடரை வென்றுவிட்டு தனது காயம் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசியது அவரின் முதிர்ச்சியை வெளிக்காட்டியுள்ளது. இதனால் ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய அணியின் அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐபிஎல் கோப்பையுடன் ஸ்ரேயாஸ் ஐயர் பதிவிட்டு வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. கார், நீச்சல் குளம், பார்ட்டி என எங்கு சென்றாலும் கோப்பையுடன் ஸ்ரேயாஸ் ஐயர் வேற லெவல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது 2015ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு பதிவு ட்ரெண்டாகி வருகிறது.
அதில், எனது பி.காம் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், புத்தகம் பக்கம் திரும்புவதற்கே நேரம் கிடைக்கவில்லை. ஆனால் தேர்வுகள் நெருங்கிவிட்டது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் இள வயது புகைப்படத்தையும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைத்துள்ளார். இதனை பகிர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறு வயது முதலே கிரிக்கெட்டில் இருந்து வருகிறார். மும்பை ஸ்ட்ரீட் கிரிக்கெட் தொடங்கி பிரத்யே பயிற்சியாளர் வரை ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதேபோல் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் என்ற மும்பை ஜாம்பவான்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயரும் இணைவார் என்று பார்க்கப்படுகிறது.