பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்ததாக ஆஸ்திரேலியா அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணியில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் விலகிய பின்னர், அவர்களது இடத்திற்கு டூ பிளஸிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் கொண்டு வரப்பட்டனர். அதிலும் கிளென் மேக்ஸ்வெல் பெரிய ஃபார்மில் இல்லாத போதும் ஆர்சிபி அணி அவர் மீது நம்பிக்கை வைத்து ரூ. 14.25 கோடிக்கு ஏலத்தில் சிஎஸ்கே அணியுடன் போட்டிப்போட்டு வாங்கியது.

அதற்கேற்ப கிளென் மேக்ஸ்வெல் ஆர்சிபி அணிக்காக பொளந்து கட்டினார். ஆர்சிபி அணிக்காக ஆடிய முதல் சீசனில் 513 ரன்களும், 2வது சீசனில் 301 ரன்களும், கடந்த சீசனில் 400 ரன்களையும் விளாசி மிடில் ஆர்டரில் முக்கிய தூணாக இருக்கிறார். இதனால் இவர்கள் மூவரையும் சேர்த்து கே.ஜி.எஃப் கூட்டணி என்று ஆர்சிபி அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் குறித்து கிளென் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனது சொந்த வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி.. மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஐபிஎல் தொடரின் போது சந்திக்கும் பயிற்சியாளர்கள், அங்கு சந்திக்கும் வீரர்கள் உள்ளிட்ட அனுபவங்கள் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதேபோல் ஆர்சிபி அணியில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலியுடன் 2 மாதங்கள் இணைந்து பேசுவது, ஒன்றாக போட்டிகளை பார்ப்பது, ஆலோசிப்பது உள்ளிட்ட அனுபவங்கள் மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. இதுபோன்ற அனுபவங்களை எந்த கிரிக்கெட் வீரரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். என்னால் நடக்க முடியாது என்ற நிலை வரும் வரை நான் ஐபிஎல் ஆடுவேன். அதேபோல் அடுத்ததாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் நடக்கவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் நடப்பதால், அதேபோன்ற சூழலான இந்திய மண்ணில் ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. இதனால் ஏராளமான ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஐபிஎல் விளையாட ஆர்வமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அங்கு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதேபோல் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த உடனே, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.