சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இன்னும் 10 நாட்களில் பேட்டிங் பயிற்சியை தொடங்க உள்ளதாக அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மினி ஏலத்தில் சிறப்பாக செயல்பட்ட அணிகளில் முக்கியமானது சிஎஸ்கே. சிஎஸ்கே அணி தரப்பில் டேரல் மிட்செல் ரூ.14 கோடிக்கும், சமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கும், முஸ்டாஃபிகுர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கும், ரச்சின் ரவீந்திரா ரூ.1.8 கோடிக்கும் வாங்கப்பட்டனர். மொயின் அலிக்கு பேக் அப் வீரராகவும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராயுடு இருவருக்கும் மாற்று வீரர்களையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தில் வாங்கியது.

இதனிடையே காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் இருந்து தோனி முழுமையாக குணமடைந்தாரா, முழு சீசனிலும் விளையாடுவாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது. அதேபோல் மீண்டும் தோனி எப்போது பயிற்சியை தொடங்குவார் என்ற கேள்வி சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிகமாகியது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஜூனியர் சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சியில் அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அதில், இதுதான் தோனியின் கடைசி சீசனா என்ற கேள்விக்கு தோனி தான் மட்டுமே பதில் அளிக்க முடியும். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை எப்போதும் எங்களுக்கு கூறியதில்லை. அவரின் காயத்தை பொறுத்தவரை முழுமையாக குணமடைந்துவிட்டார். காயத்திற்கு பின்னான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். ஏற்கனவே ஜிம்மில் பயிற்சியை தொடங்கியுள்ளார். அடுத்த 10 நாட்களில் பேட்டிங் பயிற்சியையும் தொடங்கிவிடுவார். மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று கூறப்பட்டது.
அதனால் சிஎஸ்கே அணி தரப்பில் மார்ச் முதல் வாரத்தில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்படும். ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்கும் என்று தான் கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலால் வேறு நாட்டில் ஐபிஎல் மாற்ற போவதில்லை என்றே ஏலத்தின் போது எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஏலத்தை பொறுத்தவரை டேரல் மிட்செல் மற்றும் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் இருவர் மட்டுமே எங்களின் திட்டத்தில் இருந்தனர். இருவரையும் எங்களால் வாங்க முடிந்ததால், சிஎஸ்கே அணிக்கு சிறந்த ஏலமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.