பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடர் ஒரு புதிய இந்திய வேகப் பந்துவீச்சாளரை அடையாளம் காட்டி இருக்கிறது. அவர் தான் மயங்க் யாதவ். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் அவர் இதுவரை இரண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். ஆனால், இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களையும் வியக்க வைத்திருக்கிறார் அவர்.
வேகப் பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் 155 கிலோ மீட்டர் வேகத்தில் அசாதாரணமாக பந்து வீசுகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் சராசரி வேகமே 145 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு வந்தது. காஷ்மீரை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அவ்வப்போது 150 கிலோமீட்டர் வேகத்துக்கும் அதிகமாக பந்து வீசி கவனத்தை ஈர்த்தார். ஆனால், அவரால் தொடர்ந்து அந்த வேகத்தில் வீச முடியவில்லை. அதே போல பந்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனால், மயங்க் யாதவ் தொடர்ந்து 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். அத்துடன் பந்தை சரியான லைன், லென்த்தில் வீசுகிறார். 150 கிலோ மீட்டர் வேகத்தில் துல்லியமாக ஸ்டம்ப்பை நோக்கி வரும் பந்துகளை சமாளிக்க முடியாமல் அனுபவ ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கிளென் மேக்ஸ்வெல், கேமரான் கிரீன் போன்றோரே திணறினர்.
மயங்க் யாதவின் இந்த துல்லியமான பந்துவீச்சுக்கு காரணமே வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ் தான். அவரது பந்துவீச்சு முறையை தான் மயங்க் யாதவ் அப்படியே பின்பற்றுகிறார். அதே ஓட்டம், அதே முறையில் கைகளை உயர தூக்கி சரியான லைனில் வீசுவது என அப்படியே கர்ட்லி ஆம்ப்ரோஸ் பந்து வீசுவது போலவே பந்து வீசுகிறார் மயங்க் யாதவ்.
இதை அடுத்து பலரும் 21 வயதேயான மயங்க் யாதவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் எனவும், 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் இந்தியா சார்பில் பந்து வீச வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுடன், மயங்க் யாதவ் பந்து வீசினால், இரண்டு துல்லியமான பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் எதிரணிகள் திணறும் என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். செவி சாய்க்குமா தேர்வுக் குழு?