மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாக பிளவு பட்டு இருப்பதாக ஒரு தகவல் வலம் வரத் துவங்கி இருக்கிறது. முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பக்கம் சில வீரர்கள் சேர்ந்து இருப்பதாகவும், ஹர்திக் பாண்டியா பக்கம் சில வீரர்கள் சேர்ந்து இருப்பதாகவும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
2024 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். இந்த மாற்றத்தில் ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்டவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதால் அவர்கள் போட்டிக்கு முன் பாண்டியா உடன் அதிகம் பேசவில்லை.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். மறுபுறம் போட்டியில் கேப்டன் பாண்டியா எடுத்த சில முடிவுகளுக்கு பும்ரா மற்றும் ரோஹித் சர்மா ஒப்புக் கொள்ளாமல் வாதம் செய்தனர்.
இந்த நிலையில் முதல் போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டி முடிந்த உடன் ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஆடுகளத்தில் ஒன்றாக நின்று கொண்டிருந்தனர். அதே சமயம், வீரர்கள் அறையில் ரோஹித் சர்மா உடன் பும்ரா, திலக் வர்மா ஆகிய இருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அதை பார்த்த பலரும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து அவர்கள் விமர்சனம் செய்து பேசியதாகவே தோன்றியது.
அந்த புகைப்படம் வெளியான நிலையில் பலரும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு பிரிவுகளாக இருப்பதாகவும், ரோஹித் சர்மா பிரிவில் பும்ரா, திலக் வர்மா போன்ற வீரர்கள் இருப்பதாகவும், ஹர்திக் பாண்டியா பிரிவில் இஷான் கிஷன் இருப்பதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மாவை கட்டியணைத்து பேச சென்றார். அப்போது ரோஹித் சர்மா அவரை திட்டிய வீடியோ காட்சிகளும் பரவி வருகின்றன.