ஹர்திக் பாண்டியாவால் ஆப்பு.. தவித்துப் போன இஷான் கிஷன்.. பிசிசிஐ முடிவுக்கு காரணமே இதுதான்
மும்பை : இஷான் கிஷன் விவகாரம் இந்திய கிரிக்கெட்டில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கும் நிலையில், அவரது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட காரணமே ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து பயிற்சி செய்தது தான் என கூறப்படுகிறது.
இந்திய அணியில் தனக்கு போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்ட இஷான் கிஷன், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக மனச் சோர்வின் காரணமாக அணியில் இருந்து தாமாக விலகினார். அதன் பின் அவர் என்ன செய்கிறார் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதற்கிடையே அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க வருமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அழைத்ததாகவும், அதற்கு இஷான் கிஷன் தான் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தயாராகவில்லை எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் தனியாக பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதுவரை இஷான் கிஷன் மீது பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தில் யாருக்கும் அதிருப்தி ஏற்படவில்லை.
ஆனால், அதன் பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் துவங்கிய சில நாட்களில் ஹர்திக் பாண்டியா உடன் இஷான் கிஷன் பயிற்சி செய்யும் வீடியோ வெளியானது. அவர்கள் இருவரும் 2024 ஐபிஎல் தொடருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள பயிற்சி மேற்கொண்டு இருப்பது அதன் மூலம் தெளிவானது. ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 2024 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற வேண்டிய நிலையில் இருக்கிறார். அதனால் அவர் ஐபிஎல் தொடருக்கு பயிற்சி செய்தது பெரிய விஷயம் இல்லை.
ஆனால், இந்திய அணிக்காக ஆட மறுத்து விட்டு ஐபிஎல் அணிக்காக பயிற்சி மேற்கொண்ட இஷான் கிஷன் செய்தது பிசிசிஐ சார்ந்த அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியது. அதன் காரணமாகவே இஷான் கிஷனுக்கு பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இஷான் கிஷன் தனியாக பயிற்சி செய்யும் வீடியோக்கள் மட்டுமே வெளியாகி, அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்திருந்தால் பிசிசிஐ இந்த அளவுக்கு கோபம் கொண்டு இருக்காது.


Click it and Unblock the Notifications