செம ட்விஸ்ட்.. ஹர்திக் பாண்டியா பக்கம் சாய்ந்த பும்ரா? மும்பை இந்தியன்ஸ் அணியில் திருப்பம்
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதை பும்ரா விரும்பவில்லை என்ற தகவல் பரவியது.
ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி மாற்றம் செய்த போது, பும்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் "அமைதியாக இருப்பதே பல சமயம் நல்லது" என சூசகமாக குறிப்பிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல, சூர்யகுமார் யாதவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். ரோஹித் சர்மா தனது நீக்கம் குறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதன் மூலம் அவரும் அதிருப்தியில் இருப்பது தெரிகிறது.

அதன் பின்னர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ரோஹித்துக்கு பிறகு தானே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வர வேண்டும் என பும்ரா நினைத்திருக்கலாம், அதனால் தான் அவர் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த போது அதிருப்தி அடைந்தார் என முன்னாள் வீரர்கள் சிலர் கூறினர்.
தற்போது 2024 ஐபிஎல் தொடர் தொடங்க சில நாட்களே இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நிலவும் அசாதாரண சூழலை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பந்துவீச்சாளர்களுக்கான திட்டங்களை வகுத்துக் கொடுப்பதோடு, அணியின் பந்துவீச்சை ஒரு கேப்டன் போல பும்ராவே கவனித்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பும்ரா முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என கூறப்படுகிறது.
பும்ரா குறித்து சமீபத்தில் பேசிய ஹர்திக் பாண்டியா, "ஜஸ்பிரித் பும்ரா நீண்ட காலமாக நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அவர் ஒரு சாம்பியன் கிரிக்கெட் வீரர். ஆம், கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இடம் பெறவில்லை. இந்த ஆண்டு அவர் அணியில் இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம். அவர் நிச்சயமாக அணியின் தலைவர்களில் ஒருவராக இருக்கப் போகிறார், மேலும் அவருக்கு இருக்கும் அனுபவம் மற்றும் அறிவு காரணமாக அனைத்து பந்துவீச்சாளர்களையும் அவர் வழிநடத்துவார்," என்றார்.


Click it and Unblock the Notifications