லக்னோ : ரவீந்திர ஜடேஜா கொடுத்த கேட்ச்சை தவற விட்டு, தோனி பேட்டிங் ஆட வருவதை ஒரு ஓவர் வரை தாமதம் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் தீபக் ஹூடாவிற்கு அந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் சிறந்த ஃபீல்டிங்கிற்கான பரிசு வழங்கினார். இந்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிதானமாக ரன் சேர்த்து வந்தது. 17வது ஓவரின் போது 5 விக்கெட்களை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்தை தூக்கி அடித்தார். பவுண்டரி கோட்டுக்கு அருகே இருந்த தீபக் ஹூடா பந்தை கையில் பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், பந்து அவர் கையில் பட்டு பவுண்டரி கோட்டுக்கு வெளியே விழுந்தது.

அதனால் ஜடேஜா அவுட் ஆவதில் இருந்து தப்பினார். அதற்கு அடுத்த ஓவரில் மற்றொரு பேட்ஸ்மேன் மொயீன் அலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் தோனி பேட்டிங் செய்ய வந்தார். அவர் 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். ஒருவேளை ஜடேஜா கொடுத்த கேட்சை தீபக் ஹூடா பிடித்திருந்தால் தோனி கூடுதலாக சில பந்துகளை சந்தித்து இருப்பார். அவர் 300க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்த நிலையில், அந்த கூடுதல் பந்துகளிலும் அவர் அதிக பவுண்டரி அடித்து இருப்பார் என்ற அர்த்தத்தில் தீபக் ஹூடா கேட்சை விட்டதற்கு அவருக்கு பரிசளித்தார் ஜான்டி ரோட்ஸ்.
தீபக் ஹூடாவிற்கு அன்று பிறந்த நாள் என்பதால் ஜான்டி ரோட்ஸ் இப்படி கூறி இருக்கலாம். உண்மையில் தோனி களத்துக்கு தாமதமாக வந்தாலும் தோனி வரும் முன் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த பின்பே ஆட்டமிழந்தார். 18வது ஓவரில் சிஎஸ்கே அணி 19 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த வகையில் ஜடேஜாவின் கேட்ச்சை தவற விட்டதால் சிஎஸ்கே அணிக்கு எந்த நஷ்டமும் இல்லை.