சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இதன் மூலம் கே கே ஆர் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. கேகேஆர் அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டு தான் ஐபிஎல் தொடரை வென்றது.
அதன் பிறகு தற்போது பத்து ஆண்டுகளுக்கு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர் தற்போது மென்டராக திரும்பி இருக்கிறார்.

கம்பீர் வருகைக்குப் பிறகுதான் கே கே ஆர் அணி தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பதாக ஊடகங்களும் ரசிகர்களும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் கேகேஆர் அணியின் வெற்றிக்கு கம்பீர் காரணம் கிடையாது, வேறு ஒரு நபர்தான் என்பதை தமிழக கிரிக்கெட் வீரரும் கே கே ஆர் அணியின் நட்சத்திர வீரருமான வெங்கடேஷ் ஐயர் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
இறுதிப்போட்டியில் வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் அரை சதம் அடித்த நிலையில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளரிடம் பேசினார். அப்போது இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இன்னும் இந்த வெற்றிக்கு அனைத்து தகுதியும் உடைய ஒரு நபர் என்றால் அது அபிஷேக் நாயர் தான். அவரால் தான் இன்று கே கே ஆர் அணி வென்றிருக்கிறது.
சிலரின் பங்களிப்பு எப்போதும் அனைவராலும் கண்டுகொள்ளப்படாது. இனி மீண்டும் அப்படி நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் நான் இதை சொல்கிறேன். கே கே ஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு இந்த உலகமே பாராட்ட வேண்டும் என்றால் அது அபிஷேக் நாயரால் மட்டும்தான். இவர் பத்து ஆண்டுகளாக கேகேஆர் அணியின் வெற்றிக்காக உழைத்து வருகிறார்.
இந்த வெற்றி எங்கள் அணியின் ரசிகர்களுக்காக கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் எங்களை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். நாங்கள் தோல்வியை தழுவிய போதெல்லாம் எங்களுக்கு உறுதுணையாக நின்று இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். வெற்றிக்கு கம்பீர் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில்,அதனை முறியடிக்கும் விதமாக வெங்கடேஷ் ஐயர் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.