கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஐபிஎல் தொடக்க சீசன்களில் கே கே ஆர் ஒரு பலமான அணியாக விளங்கி வந்தது. கம்பீர் தலைமையிலான கே கே ஆர் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
ஆனால் அதன் பிறகு கொல்கத்தா அணியால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வாங்க முடியவில்லை. இறுதிப் போட்டி வரை வந்தாலும் அவர்களால் அந்த கடைசி கட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் கேகேஆர் அணியில் புதிய மென்டராக தற்போது கம்பீர் தேர்வாகியிருக்கிறார். மேலும் இந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக திரும்பி இருப்பதால், அந்த அணியின் பலம் அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் கே கே ஆர் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
ரிங்கு சிங், ரஹ்மதுல்லா குர்பாஸ், ஆண்ட்ரூ ரஸில், வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் கே கே ஆர் அணியில் இடம் பெற்று இருப்பதால் இந்த அணி நிச்சயமாக இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்று ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே கே ஆர் அணியின் மெண்டர், கௌதம் கம்பீர், தாம் கேப்டனாக சிறந்து விளங்கியதற்கு காரணம் கேகேஆர் தான் என்று கூறி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர் தாம் கே கே ஆர் அணியை வெற்றிகரமாக மாற்றவில்லை. என்னை தான் ஒரு நல்ல தலைவனாக கே கே ஆர் அணி மாற்றி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் கே.கே.ஆர் அணியில் இருந்த போது தான் சுயநலம் இன்றி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தாம் கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.
என்னுடைய 42 வயது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த விஷயத்தை நான் கூற விரும்புகிறேன். நான் விளையாடியதிலேயே ஒரு நல்ல மனிதன் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவருக்காக நெஞ்சில் தோட்டாவை கூட வாங்கிக் கொள்ளலாம் என்றால், நான் நெதர்லாந்து வீரர் ரியான் டென் டோஸ்கோட்செட் தான் கூறுவேன். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ரியான் டென் டோஸ்கோட்செட் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
ஆனால் நான் கேகேஆர் அணியில் கேப்டனாக இருந்தபோது வெறும் மூன்று வெளிநாட்டு வீரர்களை தான் வைத்திருந்தேன். ஆனால் இது குறித்து கவலைப்படாமல் அவர் எங்களுக்காக தண்ணீர் பாட்டில்களை தூக்கிக் கொண்டு மைதானத்திற்கு வந்தார். அவரிடமிருந்து தான் நான் சுயநலம் இன்றி எப்படி நடந்து கொள்வது என்பதை கற்றுக் கொண்டேன். இதுபோன்ற வீரர்கள் தான் என்னை நல்ல தலைவராக மாற்றினார்கள் என்று கம்பீர் கூறினார்.