மும்பை: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் ஆன்ட்ரே ரசலை விடுவிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர்களில் ஒருவரான ஆன்ட்ரே ரசல் கொல்கத்தா அணிக்காக 10 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆன்ட்ரே ரசலின் செயல்பாடுகள் கொல்கத்தா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரது இடத்தில் களமிறங்கும் ரிங்கு சிங் அபாரமாக செயல்பட்டு வருவதால், மாற்று வீரர்களை தேர்வு செய்ய கேகேஆர் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியுடனான ஆன்ட்ரே ரசலின் உறவு முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவரை கொல்கத்தா அணி விடுவிப்பதற்கு முன்பாக டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்ய பல்வேறு அணிகள் முயன்று வருகின்றன. இன்னும் 2 நாட்களே இருப்பதால், கொல்கத்தா அணியிடம் இருந்து ஆன்ட்ரே ரசலை ஒப்பந்தம் செய்ய மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் முயற்சித்து வருகின்றன.
ஏற்கனவே லக்னோ அணியிடம் இருந்து ஆவேஷ் கானை பெற்றுக் கொண்டுள்ள ராஜஸ்தான் அணி, மிடில் ஆர்சரில் ஹெட்மயருக்கு இணையாக மற்றொரு வீரரை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஃபினிஷர் ரோலில் களமிறங்க கூடிய வீரராக இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அணி நிர்வாகிகள் பார்த்து வருகின்றனர்.
இதனால் மினி ஏலத்தில் பேட் கம்மின்ஸ், கோட்சியே உள்ளிட்ட வீரர்களை வாங்க முயன்று வருவதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் கேகேஆர் அணி தரப்பில் ஆன்ட்ரே ரசலை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரை டிரேடிங் வாங்க ராஜஸ்தான் அணி முயற்சித்து வருகிறது. ராஜஸ்தான் அணியின் பிட்சில் ரசலின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே எடுபடும் என்பதால், அந்த அணி நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர்.
அதேபோல் இன்னொரு பக்கம் மும்பை அணி ஆன்ட்ரே ரசலை டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை மும்பை அணியில் கொண்டு வரும் பட்சத்தில் பொல்லார்ட் இடத்தை எளிதாக நிரப்ப முடியும். அதுமட்டுமல்லாமல் மும்பை பிட்சில் ரசல் சிறப்பாகவே விளையாடுவார். இதனால் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் ரசலை ஒப்பந்தம் செய்ய போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.