கொல்கத்தா : டெல்லி அணியின் இளம் வீரர் அபிஷேக் போரெல் ஆட்டமிழந்த போது, கேகேஆர் அணியின் ஹர்சித் ராணா "வெளியே போ" என்று சொல்வது போல் சைகை காட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் டெல்லி அணி தரப்பில் பிரித்வி ஷா - மெக்கர்க் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. கேகேஆர் அணி தரப்பில் முதல் ஓவரை மிட்சல் ஸ்டார்க் வீசினார்.

முதல் ஓவரில் அதிரடியாக பவுண்டரிகளுடன் தொடங்கினாலும், வைபவ் அரோரா பவுலிங்கில் பிரித்வி ஷா 13 ரன்களிலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மெக்கர்க் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அபிஷேக் போரெல் - ஹோப் கூட்டணி இணைந்தது. ஆனால் கண்மூடி திறப்பதற்குள் அரோராவின் அற்புதமான பவுலிங்கால் ஹோப் 3 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.
இதனால் டெல்லி அணியின் நிலையை கவலைக்கிடமாக மாறியது. இதன்பின் அபிஷேக் போரெல் - ரிஷப் பண்ட் கூட்டணி சேர்ந்தது. 3 வீரர்கள் ஆட்டமிழந்ததால், டெல்லி அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஓவரை வீச வந்த ஹர்சித் ராணா பவுலிங்கில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரியை விளாசி அசரடித்தார் அபிஷேக் போரெல்.
இதனால் அந்த ஓவரிலேயே ஹர்சித் ராணா டென்ஷனாகினார். தொடர்ந்து 7வது ஓவரை வீச ஹர்சித் ராணா மீண்டும் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்தை எதிர்கொள்ள அபிஷேக் போரெல் வந்தார். அவர் வந்த உடனே, 2 பந்துகளை தொடர்ச்சியாக பவுன்சராக வீசி அசத்தினார். இரு பந்துகளிலும் அபிஷேக் போரெல் திணற, அடுத்த பந்தில் ரன் சேர்க்கும் முனைப்பில் இருந்தார்.
இதனை அறிந்து ஹர்சித் ராணா லெக் ஸ்டம்பை நோக்கி பவுலிங் செய்ய, அபிஷேக் போரெல் லேப் ஷாட் ஆடி முயன்றார். ஆனால் பந்தை அவரை ஏமாற்றி, ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் 18 ரன்களில் அபிஷேக் ஆட்டமிழக்க, உற்சாகமடைந்த ஹர்சித் ராணா, அபிஷேக் போரெல்லை பார்த்து, "வெளியே போ" என்று கைகளால் சிக்னல் கொடுத்து கோபத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே மயங்க் அகர்வாலுக்கு எதிராக ஃபிளையிங் கிஸ் கொடுத்து சைகை செய்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.