கொல்கத்தா : கேகேஆர் அணி தோல்வியடைந்தால் நடிகர் ஷாரூக் கான் தன்னிடம் தான் கோபத்தை வெளிக் காட்டுவார் என்று நடிகை ஜூஹி சாவ்லா தெரிவித்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து கேகேஆர் அணி சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் மூலமாக கொல்கத்தா அணி அபார ரன் ரேட் காரணமாக புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த போட்டியை நேரில் காண வந்த ஷாரூக் கான், கேகேஆர் அணியின் வெற்றியால் உற்சாகமாகினர். கொல்கத்தா அணி வீரர்களின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்தையும் பாராட்டிய ஷாரூக் கான், போட்டி முடிவடைந்த பின் அனைத்து வீரர்களையும் சந்தித்தார்.
இதனால் விசாகப்பட்டினம் ரசிகர்களும் உற்சாகமாகினார்கள். இந்த நிலையில் கேகேஆர் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜூஹி சாவ்லா பேசுகையில், ஒரு முறை மும்பையில் உள்ள தொலைக்காட்சி செட்டில் அமர்ந்து நானும் ஷாரூக் கானும் ஐபிஎல் போட்டியை பார்த்து கொண்டிருந்தோம். அந்த நாளில் கேகேஆர் அணி விளையாடியது. இதனால் நாங்கள் கூடுதல் எதிர்பார்ப்புடன் பார்த்து கொண்டிருந்தோம்.
எங்களிடம் கொஞ்சம் கூடுதல் பதற்றமும் இருந்தது. என்னை பொறுத்தவரை நடிகர் ஷாரூக் கானுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அவருடன் ஒன்றாக அமர்ந்து கிரிக்கெட் பார்க்க கூடாது என்பேன். ஏனென்றால், கேகேஆர் அணி சரியாக விளையாடவில்லை என்றால், அந்த கோபத்தை அப்படியே என்னிடம் கொட்டுவார்.
நானும் பதிலுக்கு என்னிடம் கோபத்தை காட்டுவதை விடவும், கேகேஆர் அணியிடமே காட்டிவிடுமாறு கூறுவேன். இப்படிதான் அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் தங்களின் அணி விளையாடும் போது கூடுதல் பதற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.