விசாகப்பட்டினம் : கேகேஆர் அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் இஷாந்த் சர்மா வீசிய ஒரே ஓவரில் 26 ரன்களை விளாசிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளும் வெற்றியுடன் விளையாடுவதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். விசாகப்பட்டினம் மைதானம் முதல் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதாக் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேகேஆர் அணி தரப்பில் பில் சால்ட் - சுனில் நரைன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. டெல்லி அணி தரப்பில் முதல் ஓவரை கலீல் அஹ்மத் வீசினார். முதல் 2 ஓவர்களில் அமைதி காத்த கேகேஆர் அணி, 3வது ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கியது. கலீல் அஹ்மத் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி அசத்தினர். அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 15 ரன்கள் சேர்க்கப்பட்டது.
இதன்பின் 4வது ஓவரில் மீண்டும் இஷாந்த் சர்மா வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சுனில் நரைன் சிக்ஸ் அடிக்க, 2வது பந்து சிக்சருக்கு விளாசப்பட்டது. தொடர்ந்து 3வது பவுண்டரி அடிக்கப்பட, 4வது பந்து டாட் பாலாகியது. ஆனால் 5வது பந்தில் மீண்டும் ஒரு சிக்சர் அடிக்கப்பட, கடைசி பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது. இந்த ஓவரில் மட்டும் சுனில் நரைன் 26 ரன்களை விளாசினார்.
இதனை பெவிலியன் அமர்ந்து பார்த்து கொண்டிருந்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கோபத்துடன் பார்த்து கொண்டிருந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய சுனில் நரைன் வெறும் 21 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அதுமட்டுமல்லாமல் பவர் பிளே ஓவர்களின் முடிவில் கேகேஆர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 88 ரன்களை குவித்தது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி வரலாற்றிலேயே, பவர் பிளே ஓவரில் குவிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2017ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிரான கேகேஆர் அணி பவர் பிளே ஓவர்களில் 105 ரன்கள் குவித்தது. சுனில் நரைனின் அதிரடி பேட்டிங் ஃபார்ம் காரணமாக கேகேஆர் அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்று பார்க்கப்படுகிறது.