விசாகப்பட்டினம் : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அடைந்த தோல்விக்கு பின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக டெல்லி அணி, இந்த ஐபிஎல் தொடரில் 3வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், டெல்லி அணியின் ரன் ரேட்டும் மோசமாக மாறியுள்ளது. இதில் இருந்து மீண்டு வர வேண்டுமென்றால் டெல்லி அணி தொடர் வெற்றிகளை பெற வேண்டும்.
இந்த தோல்வி குறித்து டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசுகையில், எங்கள் அணி மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தியது. நாங்கள் 272 ரன்கள் விட்டுக் கொடுத்தோம் என்பதை விடவும், 17 ஒய்டுகளை வீசி இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், 20 ஓவர்களை வீசுவதற்காக நாங்கள் 2 மணி நேரத்தை எடுத்து கொண்டுள்ளோம்.
சரியான நேரத்தில் ஓவர்களை வீச முடியாததால், கடைசி 2 ஓவர்களில் 30 யார்ட் வளையத்திற்கு வெளியில் 4 ஃபீல்டர்களை மட்டுமே நிற்க வைக்க முடிந்தது. ஒட்டுமொத்த அணியின் ஆட்டம் குறித்து விமர்சிப்பது இந்த விவகாரத்தில் கொஞ்சம் கடினமாக உள்ளது. இந்த போட்டியில் ஏற்றுக்கொள்ள முடியாத தவறுகளை செய்துள்ளோம். இந்த பிரச்சனைகளை உடனடியாக ஆலோசித்து சரி செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும். நிச்சயம் அணியினருடனான மீட்டிங்கில் ஏராளமான விஷயங்கள் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார். டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் 7வது சீசனான செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.