கொல்கத்தா : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியால் ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட மிட்சல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய லக்னோ அணிக்கு டி காக் - கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார்.

இந்த சீசனில் மிட்சல் ஸ்டார்க்கின் செயல்பாடுகள் பெரியளவில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை. ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கப்பட்டதால் அவரிடம் இருந்து ரசிகர்கள் ஆட்டத்தையே திருப்பக் கூடிய ஸ்பெஷல் பவுலிங்கை எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
தொடர்ந்து வீசப்பட்ட 2வது ஓவரில் 8 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில், 3வது ஓவரில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை வீழ்த்தி சர்ப்ரைஸ் கொடுத்ததோடு, அந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்பின் கடைசி ஓவரை வீச மீண்டும் ஸ்டார்க் அழைக்கப்பட்டார். லக்னோ அணி தரப்பில் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் தயாராக இருந்தார்.
ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே நிக்கோலஸ் பூரன் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து கடைசி பந்தில் 142 கிமீ வேகத்தில் அற்புதமான யார்க்கரை வீசி அசத்தினார். இதனை எதிர்கொள்ள முடியாமல் அர்ஷத் கான் போல்டாக, அந்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக பவுலிங் செய்த மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 13 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மிட்சல் ஸ்டார்க் வாங்கிய ரூ.24.75 கோடிக்கு இன்று தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.