கொல்கத்தா : சிறந்த தொடக்கம் கிடைத்தும் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால் தோல்வியடைந்ததாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.

இந்த சீசனில் மும்பை அணியின் 9வது தோல்வி இதுவாகும். இந்த போட்டியில் மும்பை அணி 5 ஓவர்களில் 59 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 11 ஓவர்களில் 99 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்து ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய மும்பை அணி மீண்டும் தோல்வியை சந்தித்திருப்பது அந்த அணியின் ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.
இந்த தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், தோல்வி நிச்சயம் கடினமாக தான் இருக்கிறது. சேஸிங்கில் சிறந்த அடித்தளம் கிடைத்த போது, ஒட்டுமொத்தமாக பேட்ஸ்மேன்கள் சொதப்பி இருக்கிறோம். சீராக ரன்களை சேர்க்காமல் விக்கெட்டுகளை பறி கொடுத்துள்ளோம்.
இந்த பிட்ச் கொஞ்சம் ஏற்ற, இறக்கமாக தான் இருந்தது. ஆனால் கேகேஆர் அணி எங்களுக்கு நிர்ணயித்த இலக்கு சராசரி இலக்கு தான். மும்பை அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல் கேகேஆர் அணியின் பவுலர்களும் சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி கொண்டே இருந்தனர். அடுத்த போட்டிக்கு முன் எந்த சிந்தனையும் இல்லை. சிறந்த கிரிக்கெட்டை உற்சாகமாக விளையாட வேண்டும்.
அது மட்டுமே தொடக்கம் முதல் என் சிந்தனையாக உள்ளது. ஆனால் இந்த சீசனில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று தெரிவித்துள்ளார். மும்பை அணியின் கேப்டனாக முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா சொதப்பியுள்ளது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஃபினிஷராக ஹர்திக் பாண்டியாவுக்கும் மோசமான சீசனாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.