கொல்கத்தா : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணியின் அதிரடி தொடக்க வீரர் பில் சால்ட் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. கொல்கத்தா மைதானம் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் - பில் சால்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

பஞ்சாப் அணி தரப்பில் முதல் ஓவரை கேப்டன் சாம் கரண் வீசினார். முதல் ஓவரிலேயே 7 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் சிங் வீசிய 2வது ஓவரில் 13 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து ஹர்சல் படேல் வீசிய 3வது ஓவரில் 6, 4, 6 என்று விளாசி பில் சால்ட்-ம் அட்டாக்கில் பொளந்து கட்டினார். இவரது அதிரடி ரபாடா பவுலிங்கிலும் தொடர, பின்னர் சாம் கரண் பவுலிங்கில் 2 பவுண்டரிகளை பொளந்து கட்டினார்.
மீண்டும் ரபாடா வீசிய 8வது ஓவரில் 22 ரன்கள் அடிக்கப்பட, இதன் காரணமாக 8 ஓவர்களிலேயே கேகேஆர் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. ஒரு பக்கம் சிறப்பாக விளையாடிய சுனில் நரைன் 23 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுபக்கம் நின்றிருந்த பில் சால்ட் 25 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். இந்த ஐபிஎல் தொடரில் பில் சால்ட் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும்.
அதுமட்டுமல்லாமல் பில் சால்ட் இந்த சீசனில் பவர் பிளே ஓவர்களில் மட்டும் 193 ரன்களை விளாசி இருக்கிறார். இந்த இன்னிங்ஸில் பில் சால்ட் கொடுத்த 2 கேட்ச்களை கேப்டன் சாம் கரண் மற்றும் ரபாடா இருவரும் கோட்டைவிட்டனர். இதன் பலனை பஞ்சாப் அணி அனுபவித்து வருவதாக வர்ணனையாளர்களே கிண்டல் செய்தனர்.
இறுதியாக 37 பந்துகளில் 6 சிக்ஸ், 6 ஃபோர்ஸ் உட்பட 75 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் தவிர்க்கப்பட்ட பில் சால்ட், கேகேஆர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜேசன் ராய் சொந்த காரணங்களால் விலகியதால், மாற்று வீரராக வந்து பில் சால்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.