கொல்கத்தா : டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசப்பட்ட போட்டியாக கேகேஆர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அமைந்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்து பஞ்சாப் அணி புதிய வரலாற்றை படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்திருந்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி பேர்ஸ்டோவ் மற்றும் ஷஷாங்க் சிங்கின் அதிரடி ஆட்டம் காரணமாக 18.4 ஓவர்களில் 262 ரன்களை சேஸ் செய்துள்ளது.

இதன் மூலமாக டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் அணி சாதனை படைத்துள்ளது. அதேபோல் சேஸிங்கில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டி20 வரலாற்றில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டிகளின் பட்டியலில் 2வது இடத்தில் இந்த போட்டி இடம்பெற்றுள்ளது. முதல் இடத்தில் ஐதராபாத் - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் உள்ளது.
அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ராஜஸ்தான் அணி 224 ரன்களை சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையையும் பஞ்சாப் அணி முறியடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை விளாசிய அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மொத்தமாக பஞ்சாப் அணி தரப்பில் 24 சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளது.
அதேபோல் டி20 கிரிக்கெட்டில் இந்த போட்டி அதிக சிக்சர்கள் விளாசப்பட்ட போட்டியாகவும் அமைந்துள்ளது. இதற்கு முன்பாக ஐதராபாத் - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் 38 சிக்சர்களும், ஆர்சிபி - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 38 சிக்சர்களும் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை கேகேஆர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டத்தில் 42 சிக்சர்கள் விளாசப்பட்டதன் மூலமாக முறியடிக்கப்பட்டுள்ளது.