கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பவுலர்களை யாராவது தயவுசெய்து காப்பாற்றுங்கள் என்று ராஜஸ்தான் அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 262 ரன்கள் இலக்கை சேஸ் செய்து பஞ்சாப் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி வெறும் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது.

அதிரடியாக ஆடிய பஞ்சாப் அணியின் பேர்ஸ்டோவ் 48 பந்துகளில் 108 ரன்களும், இளம் வீரர் ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்களும் விளாசினர். இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து மொத்தமாக 523 ரன்களையும் குவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா அணி தரப்பில் 18 சிக்சர்களும், 24 சிக்சர்களும் என்று மொத்தமாக 42 சிக்சர்களும் விளாசப்பட்டுள்ளது.
ஒரே போட்டியில் அதிக ரன்கள் சேஸிங், அதிக சிக்சர்கள் என்று பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பவுலர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது. இம்பேக்ட் பிளேயர் விதிகள், சிறிய பவுண்டரி, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் என்று அனைத்து ரன்கள் குவிப்பதற்கு சாதகமாக இருப்பதால், 7வது முறையாக இந்த ஐபிஎல் சீசனில் 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிரிக்கெட் விளையாட்டில் பவுலர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான போட்டியில் சமமில்லாத நிலை உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், "யாராவது பவுலர்களை காப்பாற்றுங்கள்.. ப்ளீஸ்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் இதே பிட்சில் தான் சுனில் நரைன் 4 ஓவர்களில் வெறும் 24 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும், ராகுல் சஹர் 4 ஓவர்களில் வெறும் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இதனால் பவுலர்கள் இதுபோன்ற பிட்ச்களை சவாலாக எடுத்து கொண்டு பவுலிங் செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.