கொல்கத்தா : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் மிட்சல் ஸ்டார்க் சேர்க்கப்படவில்லை.
ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதேபோல் கேகேஆர் அணி தரப்பில் நட்சத்திர வீரர் மிட்சல் ஸ்டார்க் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இலங்கை அணியின் சமீரா சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா அணி விளையாடிய கடந்த போட்டியில் மிட்சல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் ஆர்சிபி அணியின் கரண் சர்மா, 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் கேகேஆர் அணி ரசிகர்கள் பதறிவினர். கடைசியில் எப்படியோ அதிர்ஷ்டவசமாக 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் ஏலத்தில் ரூ.24.75 கோடி கொடுத்து கேகேஆர் அணி மிட்சல் ஸ்டார்க்கை வாங்கியது. தோனி, விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோரை விடவும் அதிக சம்பளத்தை மிட்சல் ஸ்டார்க் பெற்றதால், அவரின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மற்றபடி எந்த போட்டியிலும் ஸ்டார்க் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து ஸ்டார்க் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போதே ஸ்டார்க் கைகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் பவுலிங் செய்தார்.
இந்த போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சமீரா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மிட்சல் ஸ்டார்க் மற்றும் சமீரா இருவரையும் கேகேஆர் அணிக்குள் கொண்டு வந்தது கவுதம் கம்பீர் தான். ஏற்கனவே லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த போது, சமீரா அந்த அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.