கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பில் சால்ட் 75 ரன்களும், சுனில் நரைன் 71 ரன்களும் விளாசினர். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின் 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணி தரப்பில் பிரப்சிம்ரன் சிங் - பேர்ஸ்டோவ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் பிரப்சிம்ரன் சிங் அமைதி காத்த நிலையில், ஹர்சித் ராணா வீசிய 2வது ஓவரில் 2 சிக்சர்களை விளாசி அசத்தினார். தொடர்ந்து சமீரா வீசிய 3வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 23 ரன்களை விளாசினார்.
இவரின் அதிரடி காரணமாக பஞ்சாப் அணி 3.3 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. இதனால் வழக்கத்திற்கு மாறாக சுனில் நரைன் 4வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் அபாரமாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி பிரப்சிம்ரன் சிங் அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் 18 பந்துகளில் பிரப்சிம்ரன் சிங் அரைசதத்தையும் எட்டினார்.
அதேபோல் பஞ்சாப் அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த 3வது வீரர் என்ற சாதனையையும் பிரப்சிம்ரன் சிங் படைத்துள்ளார். இவருக்கு முன்பாக கேஎல் ராகுல் 14 பந்துகளிலும் அரைசதம் அடித்து முதலிடத்திலும், நிக்கோலஸ் பூரன் 17 பந்துகளில் அரைசதம் அடித்து 2வது இடத்திலும் உள்ளனர். இதனால் பிரப்சிம்ரன் சிங் களத்தில் இருந்ததால், ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கைகள் ஓங்கியது.
தொடர்ந்து பவர் பிளேவின் கடைசி ஓவரில் பேர்ஸ்டோவ் 24 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்று பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். சுனில் நரைன் பந்தில் அதிரடியாக ரன்களை குவித்த பிரப்சிம்ரன் சிங், அவரின் கைகளாலேயே நேராக ஸ்டம்பில் த்ரோ அடித்து ரன் அவுட் செய்தார்.