கொல்கத்தா : கேகேஆர் அணியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காதது குறித்து இளம் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்காக ஆடிய யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசி உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் ரிங்கு சிங். அந்த ஐபிஎல் தொடரில் 450க்கும் அதிகமான ரன்களை விளாசிய ரிங்கு சிங், அடுத்தடுத்து இந்திய அணிக்காக சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடி வருகிறார். குறிப்பாக ஃபினிஷர் ரோலில் ரிங்கு சிங்கின் ஆட்டம் பிரமிக்க வைக்கிறது.

இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் ரிங்கு சிங் முதல் வீரராக இடம்பிடிப்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ரிங்கு சிங்கிற்கு பெரிதாக பேட்டிங் செய்யும் வாய்ப்பே கிடைக்கவில்லை. சுனில் நரைன், பில் சால்ட், ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர், ரஸ்ஸல் ஆகியோருக்கு பின் 6வது வீரராக ரிங்கு சிங் களமிறக்கப்பட்டு வருகிறார்.
அதில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங் இன்பேக்ட் பிளேயராக மட்டுமே பயன்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் சேர்க்கப்படுவதை ஸ்ரேயாஸ் ஐயர் விரும்பவில்லை என்பதாலேயே, இப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்தன.
இந்த சீசனில் வெறும் 83 ரன்களை மட்டுமே ரிங்கு சிங் கிடைத்த வாய்ப்புகளில் சேர்த்துள்ளார். இதுகுறித்து ரிங்கு சிங் பேசுகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது எனக்கு காயம் ஏற்பட்டது. அதனால் தான் பேட்டிங் மட்டும் செய்தேன். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் முழுமையாக விளையாடுவேன் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.
கடந்த சீசனில் 5 பந்துகளில் 5 சிக்சர் அடிக்க முடிந்தது. அன்றைய நாள் என்னுடைய நாளாக அமைந்தது. ஆனால் இந்த சீசனில் பெரியளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. டாப் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். குறிப்பாக சுனில் நரைன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். கிடைக்கும் வாய்ப்புகள் நிச்சயம் ஸ்கோர் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.