கொல்கத்தா : சுனில் நரைன் வீசிய ஓவரில் 2 விக்கெட்டுகளை கொடுத்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் விளாசியது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. கடைசி பந்தில் 3 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், 2வது ரன்னை எடுக்க முயன்ற போது ஃபெர்குசன் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இதன் காரணமாக ஆர்சிபி அணி நடப்பு சீசனில் 7வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்த தோல்வி குறித்து ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பேசுகையில், விதிகள் அனைவருக்கும் ஒன்று தான். நானும் விராட் கோலியும் அந்த பந்து இடுப்புக்கு மேல் இருந்ததாகவே நினைத்தோம். ஆனால் விராட் கோலி க்ரீஸில் இருந்து வெளியில் வந்த இடத்தில் இருந்து பந்தின் அளவு கணக்கிடப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இதனால் இரு அணிகளும் தங்களுக்கு எது சாதகமான முடிவு, அதனை சரியென நினைக்கிறோம்.
ஜாக்ஸ் - பட்டிதர் கூட்டணியின் பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருந்தது. ஆனால் சில நேரங்களில் தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் போது, நிச்சயம் மனதிற்குள் பதற்றம் வருவது சகஜம் தான். இதன் காரணமாகவே சுனில் நரைன் வீசிய 13வது ஓவர் திருப்புமுனையாக இருந்தது. தற்போது டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் செட்டிலாகுவதற்கு நேரம் கிடையாது. இம்பேக்ட் பிளேயர் விதியால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வைத்து கொள்ள முடியும். அதனால் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும்.
ஆர்சிபி அணியின் போராட்டத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். ஏனென்றால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று சிறப்பாக செயல்பட்டோம். கடைசி நேரத்தில் சில ஓவர்களில் கூடுதலாக ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டோம். ஆனால் சராசரி ஸ்கோருக்குள் கேகேஆர் அணியை கட்டுப்படுத்தினோம் என்று நினைக்கிறேன். பவர் பிளேவில் நானும், விராட் கோலியும் அதிக ரன்களை சேர்க்க வேண்டும் என்று தீவிரமாக இருந்தோம். தொடக்கத்திலேயே பவுண்டரிகளை விளாச நினைத்தோம்.
அந்த முயற்சிக்கு முழு மதிப்பெண்களையும் கொடுக்கலாம். ஆர்சிபி அணிக்கு மிகவும் விஸ்வாசமான ரசிகர்கள் இருக்கிரார்கள். அவர்களை சந்தோஷப்படுத்தவே விளையாடினோம். அவர்களின் முகத்தில் சிரிப்பை கொண்டு வர நினைத்தோம். தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளிலும் அதற்காக முயற்சிப்போம். தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.