கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் கொண்டு வரப்பட்டுள்ள இம்பேக்ட் பிளேயர் விதிகளை நீக்க வேண்டும் என்று ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இம்பேக்ட் பிளேயர் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதாவது 11 வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியை, இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் 12 வீரர்கள் விளையாடும் போட்டியாக மாறியது. இதனால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனையோ அல்லது கூடுதலாக ஒரு பவுலரையோ ஒவ்வொரு அணிகளாலும் சேர்க்க முடியும்.

கடந்த சீசனில் பெரியளவில் இந்த விதிகள் தாக்கத்தை கொடுக்கவில்லை. ஆனால் இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்கு கீழ் பிரத்யேக வீரர்களை ஒவ்வொரு அணியும் களமிறக்கி வருகிறார்கள். இதனால் இந்த சீசனில் சர்வ சாதாரணமாக ஒவ்வொரு அணியும் 220 ரன்களை கடந்து வருகிறது. அதேபோல் 250 ரன்களை எளிதாக 5 முறை கடந்துள்ளனர். இதனால் பவுலர்களின் பாடு திண்டாட்டமாக மாறி வருகிறது.
இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டிக்கு பின் ஆர்சிபி அணியின் முகமது சிராஜ் பேசுகையில், தயவு செய்து இம்பேக்ட் பிளேயர் விதியை நீக்கிவிடுங்கள். ஏற்கனவே இந்திய மைதானங்களில் அனைத்து பிட்ச்களும் தார் ரோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பவுலர்களுக்கு உதவி செய்யும் வகையில் எதுவும் இருப்பதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிட்ச் சில மணி நேரத்திற்கு பின் ஸ்லோவாக மாறிவிடும். ஆனால் இப்போது பேட்ஸ்மேன்கள் எந்த சூழலில் களமிறங்கினாலும் விளாசிக் கொண்டே இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 250 ரன்களை டி20 கிரிக்கெட்டில் சேர்ப்பது அசாதாரணமாக இருந்தது. ஆனால் இப்போது சர்வ சாதாரணமாக 250 ரன்களை அடிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயர் விதிமுறைகள் சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகளை குறைத்து வருவதாக அதிருப்தி தெரிவித்திருந்தார். தற்போது மற்றொரு நட்சத்திர வீரரான சிராஜ் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை விமர்சித்திருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.