கொல்கத்தா : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் 15 பந்துகளில் வெறும் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் கம்பேக் கொடுத்த பின், நட்சத்திர வீரர் சுனில் நரைனின் செயல்பாடுகள் வேற லெவலுக்கு முன்னேற்றம் அடைந்தது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாக சுனில் நரைன் பேட்டிங்கில் பெரிதாக பங்களிப்பு அளிக்காமல் இருந்து வந்த சூழலில், இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பொளந்து கட்டினார்.

இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் நரைன் 272 ரன்களை விளாசி இருக்கிறார். அதிலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சதம் அடித்து தரமான ஃபார்மில் இருந்தார். இதனால் பலவீனமான ஆர்சிபி அணியின் பவுலிங் கூட்டணிக்கு எதிரான சுனில் நரைன் பொளந்து கட்டப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த இரு அணிகள் முன்னதாக மோதிய போட்டியில் சுனில் நரைன் 22 பந்துகளில் 47 ரன்களை விளாசி இருந்தார். இந்த நிலையில் 36வது லீக் போட்டியில் மீண்டும் ஆர்சிபி அணியை எதிர்த்து கொல்கத்தா அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் வழக்கம் போல் சால்ட் - சுனில் நரைன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
சிராஜ் வீசிய முதல் ஓவரில் பில் சால்ட் 12 ரன்களை விளாசிய நிலையில், 2வது ஓவரை எதிர்கொள்ள சுனில் நரைன் வந்தார். யாஷ் தயாள் வீசிய முதல் பந்து சுனில் நரைன் காலில் அடித்தது. இதனால் சுனில் நரைன் துடிதுடித்து போனார். இதன்பின் சுனில் நரைன் வழக்கமாக அடிக்கும் லெந்தில் வீசாமல் ஆர்சிபி பவுலர்கள் தொடர்ச்சியாக ஃபுல் லெந்த் மற்றும் யார்க்கர் பந்துகளை மட்டுமே வீசினர்.
ஒரு பக்கம் பில் சால்ட் அதிரடியில் மிரட்டினாலும், சுனில் நரைனால் ரன்கள் சேர்க்கவே முடியவில்லை. இந்த நிலையில் பவர் பிளேவின் கடைசி ஓவரில் அட்டாக் செய்ய நினைத்த சுனில் நரைன், யாஷ் தயாளை அட்டாக் செய்ய நினைத்து லாங் ஆஃபில் தூக்கி அடித்தார். அது நேராக விராட் கோலியின் கைகளில் புகுந்தது. இதனால் 15 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அதேபோல் 6 ஓவர்களில் கேகேஆர் அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சீசனில் ஆர்சிபி அணி முதல்முறையாக பவர் பிளே ஓவர்கள் முடிவதற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. இதனால் உற்சாகமான விராட் கோலி, இடைவேளையின் போது அணியினருக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஆவேசமாக பேசியது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.