சென்னை : ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
ஐபிஎல் ஃபைனலில் கேகேஆர் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் பனிப்பொழிவு வராது என்று கூறப்பட்டதால், முதல் பேட்டிங்கை தேர்வு செய்ததாக பேட் கம்மின்ஸ் கூறினார்.

இதன்பின் ஐதராபாத் அணி தரப்பில் அபிஷேக் சர்மா - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் முதல் ஓவரை நட்சத்திர வீரர் ஸ்டார்க் வீசினார். குவாலிஃபையர் முதல் போட்டியில் ஸ்டார்க் பவுலிங்கில் ட்ராவிஸ் ஹெட் ஸ்டம்பை பறிகொடுத்ததால், இம்முறை முதல் பந்தை அபிஷேக் சர்மா எதிர்கொண்டார்.
வழக்கம் போல் ஸ்டார்க் பிட்சில் இருந்த ஸ்விங்கை பயன்படுத்தி அபிஷேக் சர்மாவை திணறடித்தார். முதல் 3 பந்துகளையும் ஆஃப் ஸ்டம்ப் லைனிற்கு வெளியில் பிட்ச் செய்து ஸ்டார்க் வீச, பந்து எந்தப் பக்கம் ஸ்விங்காகிறது என்று புரியாமல் அபிஷேக் சர்மா மிரண்டு போனார். தொடர்ந்து 4வது பந்தை கொஞ்சம் ஒய்டு யார்க்கராக வீச, அந்த பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது.
2வது ரன்னை அபிஷேக் சர்மா நிதானமாக ஓட, ரமன்தீப் சிங் வீசிய த்ரோவை சரியாக பிடித்த குர்பாஸ், அதனை ஸ்டம்பில் அடிக்க தவறினார். ஆனால் அடுத்த பந்திலேயே மிட்சல் ஸ்டார்க் சரியாக பிட்ச் லைனில் ஸ்விங் செய்ய அது சரியாக ஆஃப் ஸ்டம்ப் மீதிருந்த பைல்ஸ் தூக்கி சென்றது. இதனால் அபிஷேக் சர்மா 2 ரன்களில் வெளியேறினார்.
இது ஐதராபாத் அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அபாயகரமான பவுலரான மிட்சல் ஸ்டார்க்கை அனுபவம் வாய்ந்த ட்ராவிஸ் ஹெட் எதிர்கொள்ளாமல் இளம் வீரரான அபிஷேக் சர்மாவை கோர்த்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதனால் முதல் ஓவரிலேயே கேகேஆர் அணியின் கைகள் ஓங்கியுள்ளது.