அகமதாபாத் : கேகேஆர் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் ஐதராபாத் அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
அகமதாபாத் மைதானத்தில் கேகேஆர் - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அகமதாபாத் மைதானம் எப்போதும் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் நிலையில், கம்மின்ஸ் முடிவு சரியா என்ற கேள்வி எழுந்தது.

ஏனென்றால் அகமதாபாத் பிட்சில் முதல் சில ஓவர்கள் ஸ்விங் இருக்கும். தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 2வது பந்திலேயே ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதே அகமதாபாத் மைதானத்தில் ட்ராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் விளாசி மிரட்டி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழக்க, ஒரு நிமிடம் ஐதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் இந்த சீசனில் முதல்முறையாக ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்துள்ளனர். தொடர்ந்து ராகுல் த்ரிப்பாட்டி - நிதீஷ் ரெட்டி கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அதிரடியாக சில பவுண்டரிகளை அடிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் 5வது ஓவரை வீச மீண்டும் ஸ்டார்க் வந்தார். இந்த ஓவரின் 5வது பந்தில் நிதீஷ் ரெட்டி 9 ரன்களில் ஆட்டமிழக்க, திடீரென ஷாபாஸ் அஹ்மத் களமிறங்கினார். ஷாபாஸ் அஹ்மத் பேட்டிங் செய்ய வரும் போதே வர்ணனையாளர்கள் தவறான முடிவாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்தனர். சரியாக ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஷாபாஸ் அஹ்மத் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இதனால் ஐதராபாத் அணி 5 ஓவர்களில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டாஸிலேயே கம்மின்ஸ் எடுத்த முடிவு தவறாக பார்க்கப்பட்ட நிலையில், பவர் பிளேவில் விக்கெட்டுகள் வீழ்ந்ததும் கிளாசனை பதுக்கி வைத்து ஷாபாஸ் அஹ்மத் விக்கெட்டையும் பலி கொடுத்துள்ளார். அதேபோல் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விஜயகாந்தை அமர வைத்து கிளென் பிலிப்ஸ் உடன் விளையாடி இருக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.