சென்னை : ஐபிஎல் தொடரின் எமர்ஜிங் வீரருக்கான விருதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் புறக்கணிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்பின் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர், சிறந்த கேட்ச், அதிக சிக்ஸ், அதிக பவுண்டரி, அதிக ஸ்ட்ரைக் ரேட் என்று பல்வேறு விருதுகள் அளிக்கப்பட்டன.

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான விருது அளிக்கப்பட்டது. இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஐதராபாத் அணியின் நிதிஷ் குமார் ரெட்டி, தமிழக வீரர் சாய் சுதர்சன், கேகேஆர் அணியின் ஹர்சித் ராணா உள்ளிட்டோர் முன்னணியில் இருந்தனர். இதனால் யாருக்கு எமர்ஜிங் வீரருக்கான விருது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஏனென்றால் தமிழக வீரர் சாய் சுதர்சன் 12 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட 527 ரன்களை விளாசினார். அதேபோல் கேகேஆர் அணியின் ஹர்சித் ராணா 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிலும் ஐபிஎல் பைனலில் ஒரு ஓவரை மெய்டன் செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் ரெட்டி 15 போட்டிகளில் விளையாடி 303 ரன்களும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் எமர்ஜிங் வீரருக்கான விருது நிதிஷ் குமார் ரெட்டிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது சென்னை சேப்பாக்கம் மைதான ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் இந்த சீசனில் படைத்திருந்தார். இதனால் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குட்டி ஹர்திக் பாண்டியா என்று அழைக்கப்படும் நிதிஷ் ரெட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் நிர்வாகத்தினர் வேண்டுமென்றே சாய் சுதர்சனை புறக்கணித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.