சென்னை : ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன் கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் இருவரும் இணைந்து எடுத்த போட்டோஷூட்டை வைத்து ரசிகர்கள் புதிய தியரியை உருவாக்கி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் நாளை விளையாடுகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள், சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதால், ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பாக இன்று கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இருவரும் போட்டோஷூட்டில் பங்கேற்றனர். சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியில் அண்ணா பெவிலியன் முன்பாக, மெரினா கடற்கரை, படகில் அமர்ந்தவாறு என்று ஏராளமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் இடது பக்கமும், பேட் கம்மின்ஸ் வலது பக்கமும் போஸ் கொடுத்துள்ளனர். இதனை வைத்து ரசிகர்கள் புதிய தியரி ஒன்றை உருவாக்கி வருகின்றனர். இதற்கு முன் 2022 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் இடது பக்கம் நின்ற பட்லர் தான் கோப்பையை வென்றார். அதேபோல் கடந்த ஐபிஎல் தொடரில் இடது பக்கம் நின்ற தோனி தான் கோப்பையை வென்றார்.
அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இடது பக்கம் நின்றிருந்த பேட் கம்மின்ஸ் தான் கோப்பையை வென்றார். உலகக்கோப்பை தொடரில் கம்மின்ஸ் இடது பக்கமே நின்று போட்டோக்கு போஸ் கொடுத்தார். யு19 உலகக்கோப்பை தொடரில் இடது பக்கம் நின்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டனே கோப்பையை கைப்பற்றினார்.
மகளிர் ஐபிஎல் தொடரிலும் இடது பக்கம் நின்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவே கோப்பையை வென்றார். தற்போது ஐபிஎல் தொடரிலும் இடது பக்கம் நிற்கும் கம்மின்ஸ் தான் கோப்பையை வெல்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் இந்த தியரி பலிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.