சென்னை : கொல்கத்தா - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஹெய்டன் கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2வது போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலமாக ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இதன் மூலம் நாளை நடக்கவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடவுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் தரமான 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் கேகேஆர் அணியை எதிர்த்து நல்ல ஸ்பின்னர்கள் இல்லாமல் ஐதராபாத் அணி மோதவுள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆஷஸ் ஆகியவற்றை கைப்பற்றிய கம்மின்ஸ், ஐபிஎல் கோப்பையை எப்படி கைப்பற்றுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்று சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன் கணித்துள்ளார். இதுதொடர்பாக ஹெய்டன் பேசுகையில், கேகேஆர் அணி நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். குவாலிஃபையர் முதல் போட்டிக்கு பின் கேகேஆர் அணி வீரர்களுக்கு சிறந்த ஓய்வும் கிடைத்துள்ளது.
அதேபோல் ராஜஸ்தான் - ஐதராபாத் இடையிலான போட்டியையும் பார்த்துவிட்டேன். இந்த போட்டி ஐதராபாத் அணியின் பலம், பலவீனம் ஆகியவற்றையும் அறிய உதவியாக இருந்தது. ஏற்கனவே ஐதராபாத் அணியை கேகேஆர் அணி வீழ்த்தி இருப்பதால், நிச்சயம் மனதளவில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் சிவப்பு மண்ணை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கேகேஆர் அணியின் ஸ்பின்னர்களான சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் நிச்சயம் மிகப்பெரிய வித்தியாசமாக அமைவார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த சீசனில் வருண் சக்கரவர்த்தி 20 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.