சென்னை : ஐபிஎல் பைனலில் ஐதராபாத் அணிக்கு எதிராக முதலில் பவுலிங் செய்தது எங்களின் அதிர்ஷ்டம் என்று கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் பைனலில் ஐதராபாத் அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கேகேஆர் அணி சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக ஐபிஎல் தொடரை வென்ற 5வது இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். இவருக்கு முன் தோனி, கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் வென்றிருந்தனர்.

தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வென்று தனது கேப்டன்சி திறமையை நிரூபித்துள்ளார். 2014ஆம் ஆண்டுக்கு பின் கேகேஆர் அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வந்த நிலையில், கொல்கத்தா ரசிகர்களின் 10 ஆண்டு ஏக்கத்தை ஸ்ரேயாஸ் ஐயர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கம், இந்திய அணியில் இருந்து நீக்கம், காயத்தால் அவதி என்று ஏராளமான பிரச்சனைகளை கடந்து ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டு வந்துள்ளார். இந்த வெற்றிக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், கேகேஆர் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரிடம் எதிர்பார்த்ததற்கு ஏற்ப, செயல்பட்டார்கள் என்று சொல்ல வேண்டும். இந்த ஃபீலிங்கை சரியாக என்னால் வெளிப்படுத்த முடியவில்லை.
நிறைய விஷயங்களை நினைத்து பெருமை கொள்ள முடியும். இன்றைய ஆட்டத்தில் முதல் பவுலிங் செய்ததால் எங்கள் பக்கம் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. ஏனென்றால் பவுலிங்கில் நாங்கள் நினைத்தது போல் எல்லாம் அமைந்தது. நிச்சயம் ஐதராபாத் அணிக்கு பாராட்டு கூற வேண்டும். இந்த சீசன் முழுக்க சிறப்பாக விளையாடினார்கள். இந்த ஆட்டத்தில் அனைவருக்கும் கூடுதல் அழுத்தம் இருந்தது.
அந்த அழுத்தத்தில் மிட்சல் ஸ்டார்க் எளிதாக செயல்பட்டார். களத்திற்கு வெளியிலும் சிறந்த மனிதராக இருக்கிறார். பயிற்சியிலும், அவரது பணியிலும் சிறந்த ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார். இளம் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல் ரஸ்ஸலிடம் ஏதோவொரு மேஜிக் இருக்கிறட்கு. எப்போதும் பவுலிங் செய்யும் ஆர்வத்துடன் என்னை பக்கம் திரும்புவார்.
அவரிடம் பந்தை கொடுத்த போதெல்லாம் விக்கெட்டுகள் கிடைத்துள்ளது. அதேபோல் வெங்கடேஷ் ஐயர் எங்களின் வெற்றியை எளிதாக மாற்றியுள்ளார். முன்னதாக சொன்னது போல், ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு வீரர்கள் முன் நின்று சிறப்பாக செயல்பட்டனர். ஒரு குழுவாக இணைந்து வெற்றிபெற்றுள்ளோம். சிறந்த சீசனாக எங்களுக்கு அமைந்தது என்று தெரிவித்தார். இதன்பின் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரிடம் இருந்து கோப்பையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்று கொண்டார்.