சென்னை : கேகேஆர் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், ஒவ்வொரு வீரர் மற்றும் நிர்வாகியையும் தேடி தேடி அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஐபிஎல் பைனலில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்களை குவித்தது. இதன் மூலமாக கேகேஆர் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

10 ஆண்டுகளுக்கு பின் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதால், அந்த அணி வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரஸ்ஸல் உள்ளிட்ட பலரையும் இளம் வீரர்கள் தூக்கி கொண்டாடினர். அதன்பின் ஆலோசகர் கவுதம் கம்பீர் காலில் விழுந்து ரிங்கு சிங் நன்றி தெரிவித்தார்.
அதேபோல் கவுதம் கம்பீரை சுனில் நரைனும், சுனில் நரைனை கவுதம் கம்பீர் தூக்கி கொண்டாடினர். இதன்பின் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கான், அவரின் மனைவி கவுரி கான், சுகானா உள்ளிட்டோர் மைதானத்திற்குள் வந்தனர். அப்போது கேகேஆர் அணியின் நிர்வாகிகளை சந்தித்து நன்றி கூறிய ஷாருக் கான், கவுதம் கம்பீருக்கு முத்தத்தை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் ஒவ்வொரு கேகேஆர் வீரரையும் தேடி சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஷாருக் கான். அப்போது வந்த ஹர்சித் ராணா, ஷாருக் கானை தூக்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின் வெங்கடேஷ் ஐயரின் பெற்றோர் வந்து ஷாருக் கானை சந்தித்தனர். அதேபோல் ஐதராபாத் அணியின் மயங்க் அகர்வாலும் அவரது மனைவி, குழந்தை மற்றும் பெற்றோரை அழைத்து வந்து ஷாருக் கானை சந்தித்தார்.
கேகேஆர் அணியின் உரிமையாளராக ஷாருக் கான் ஒவ்வொரு வீரரையும், பயிற்சியாளரையும், நிர்வாகிகளையும் தேடி தேடி நன்றி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவருக்கும் மைதானத்தை சுற்றி வந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.