சென்னை : ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெல்லப்போகும் அணியை லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோர் கணித்துள்ளனர்.
கேகேஆர் - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை சென்னையில் மழை காரணமாக இரு அணிகளின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொள்கின்றனர். கேகேஆர் அணி 3வது முறையாகவும், ஐதராபாத் அணி 2வது முறையாகவும் கோப்பையை வெல்ல தீவிரமாக இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் சிவப்பு மண்ணில் அமைக்கப்பட்டுள்ளதால், ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என்று பல்வேறு தரப்பினரும் கணிப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாகவே ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணி எது என்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், லக்னோ வீரர்கள் உள்ளிட்டோர் கணித்துள்ளனர்.
அந்த வீடியோவில் கேஎல் ராகுல், ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்த அணியின் பெஞ்ச் வலிமை மற்றும் ஃபீல்டில் வெளிப்படுத்தப்படும் ஆக்ரோஷம் சாதகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணியின் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
கேஎல் ராகுலை தொடர்ந்து மோசின் கான், பூரன், ஆயுஷ் பதோனி உள்ளிட்டோரும் கேகேஆர் அணியே வெல்லும் என்று கணித்துள்ளனர். அதேபோல் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஆஸ்திரேலியா வீரரான பேட் கம்மின்ஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ட்ராவிஸ் ஹெட்டின் ஃபார்ம், புவனேஷ்வர் குமாரின் அனுபவம் ஐதராபாத் அணிக்கு கோப்பையை பெற்று கொடுக்கும் என்று கூறியுள்ளார்.