அகமதாபாத் : தனது அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடன் தினமும் செல்ஃபோனில் பேசி வருவதாகவும் கேகேஆர் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் கேகேஆர் அணியின் தொடக்க வீரராக ஆஃப்கான் இளம் வீரர் குர்பாஸ் களமிறங்கினார். இந்த சீசனில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே எந்தவித தயக்கமும் இல்லாமல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், குர்பாஸ் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அசத்தினார். குர்பாஸின் கேமியோவால் கேகேஆர் அணி பவர் பிளே ஓவர்களில் எதிர்பார்த்ததை விடவும் அதிக ரன்களை குவித்தது. லீக் போட்டிகளின் போது கேகேஆர் அணியின் குர்பாஸ் பெஞ்சில் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது அம்மாவை பார்க்க சென்றிருந்தார்.
இந்த நிலையில் திடீரென பிளே ஆஃப் சுற்றில் விளையாட குர்பாஸ் வந்தது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து குர்பாஸ் பேசுகையில், எனது அம்மா இப்போதும் மருத்துவமனையில் தான் இருக்கிறார். நான் அம்மாவை பார்க்க சென்றிருந்த போது, கேகேஆர் அணியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த நேரத்தில் தான் பில் சால்ட் இங்கிலாந்து புறப்படுவதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
கேகேஆர் அணி தரப்பில், "குர்பாஸ்.. எங்கே இருக்கிறாய்? நீ இப்போது இங்கு தேவை" என்று மெசேஜ் கொடுக்கப்பட்டது. அதேபோல், எனது பதிலையும் கேகேஆர் நிர்வாகம் எதிர்பார்த்திருந்தது. அதற்கு நான், நிச்சயம் வருகிறேன் என்று பதிலளித்தேன். எனது அம்மாவுடன் செல்ஃபோனில் பேசி வருகிறார். கேகேஆர் அணியும் எனது குடும்பத்தை போல் தான். நிச்சயம் கேகேஆர் அணிக்கும் சிறந்த வீரராகவும், எனது அம்மாவுக்கு நல்ல மகனாகவும் இருக்க வேண்டும். கடினமாக இருந்தாலும், சமாளித்து வருகிறேன்.
ஒரு கிரிக்கெட் வீரராக நமக்கு என்ன நடக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பிளேயிங் லெவனில் 4 வீரர்களுக்கு தான் இடம் கிடைக்கும். அதனால் அதற்கு தேவையான மனநிலையை கொண்டிருக்க வேண்டும். வாய்ப்புக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும், வாய்ப்பு வரும் போது சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.