அகமதாபாத் : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ரன் அவுட்டாகி வெளியேறிய ராகுல் த்ரிப்பாட்டி ஓய்வறை செல்ல மனமில்லாமல் படியில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
கேகேஆர் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை ஆடிய ஐதராபாத் அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் மிட்சல் ஸ்டார்க் டாப் ஆர்டர் வீரர்களை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின் ராகுல் த்ரிப்பாட்டி - கிளாசன் கூட்டணி இணைந்து ஐதராபாத் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த பின்னரும் இருவரும் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினர். கேகேஆர் அணியின் நட்சத்திர ஸ்பின்னராக சுனில் நரைன் பந்திலேயே சிக்சர் அடித்து கிளாசன் பேட்டிங்கில் பொளந்து கட்டினார்.
ஆனால் பார்ட்னர்ஷிப் 62 ரன்களாக இருந்த போது, கிளாசன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்தாலும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய ராகுல் த்ரிப்பாட்டி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். சமாத் உடன் இணைந்து பவுண்டரிகளை விளாசி வந்தார். இந்த நிலையில் சுனில் நரைன் பவுலிங்கில் சமாத் ரன் எடுக்க முயற்சித்த போது ராகுல் த்ரிப்பாட்டி ரன் அவுட்டாகி வெளியேறினார்.
ராகுல் த்ரிப்பாட்டி ஓடுவதை நிறுத்திய போதும், அப்துல் சமாத் வேகமாக மறுமுனைக்கு ஓடி சென்றார். இதனால் ஏமாற்றத்துடன் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ராகுல் த்ரிப்பாட்டி பெவிலியன் சென்றார். அங்கிருந்து ஓய்வறைக்கு நடந்து செல்லும் படியில் அமர்ந்த ராகுல் த்ரிப்பாட்டி, ரன் அவுட்டானதை ஏற்க மனமில்லாமல் தலையை குனிந்து கண்ணீர் சிந்தினார். ராகுல் த்ரிப்பாட்டியின் ரன் அவுட் ஆட்டத்தை மொத்தமாக கேகேஆர் அணியின் பக்கம் திரும்பியது.