சென்னை : ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக கேகேஆர் அணி வென்ற நிலையில், நட்சத்திர வீரர் ரிங்கு சிங் ஆலோசகரான கவுதம் கம்பீர் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் பைனலில் கேகேஆர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலமாக 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு மீண்டும் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ஆலோசகர் கவுதம் கம்பீர் அமைந்துள்ளார்.

கடந்த 2 முறை கேகேஆர் அணியின் கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வென்ற கவுதம் கம்பீர், இம்முறை ஆலோசகராக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த சீசனில் தான் முதல்முறையாக கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் வந்தார். முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கடேஷ் ஐயர் வெற்றி ரன்னை எடுத்த போது, கேகேஆர் அணியின் வீரர்கள் அனைவரும் பவுண்டரி எல்லையில் இருந்து பிட்சிற்கு ஓடி வந்து கொண்டாடினர். அதில் முன்னணியில் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் இருந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரையும் பாராட்டிய ரிங்கு சிங், மற்ற கேகேஆர் அணி வீரர்களையும் தூக்கி கொண்டாடினார்.
இதன்பின் கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் நிதானமாக களத்திற்கு வந்து எதிரணி வீரர்களுக்கு கைகளை கொடுத்தார். அப்போது கவுதம் கம்பீரை பார்த்த ரிங்கு சிங், உடனடியாக அவரது காலுக்கு அருகில் சென்று கைகளை கூப்பி வணங்கி நன்றி கூறினார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதன்பின் ரிங்கு சிங்கை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்த கம்பீர், அதன்பின் சுனில் நரைனை தூக்கி கொண்டாடினார். சுனில் நரைனின் பிறந்தநாளான இன்று கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால், அந்த அணி வீரர்கள் இரட்டை கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.