சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டு ஷாருக் கானும் "சிஎஸ்கே.. சிஎஸ்கே" என்று கோஷம் எழுப்பிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2012ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி கேகேஆர் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பைனலில் கேகேஆர் அணி சாம்பியனாகியுள்ளது.

இந்த வெற்றிக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு கேகேஆர் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். அதேபோல் கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாருக் கான், அவரின் மனைவி கவுரி கான், அவரின் மகள் சுகானா, மகன் ஆர்யன் கான் மற்றும் ஆப்ரம், நடிகை அனன்யா பாண்டே, ஜூஹி சாவ்லா உள்ளிட்டோரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஷாருக் கான் தனது ஐகானிக் போஸையும் செய்து உற்சாகப்படுத்தினார். மைதானத்தின் ஒரு பகுதியில் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் "சிஎஸ்கே.. சிஎஸ்கே" என்று கோஷம் எழுப்பினர். அப்போது சிஎஸ்கே அணியின் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டு நடிகர் ஷாருக் கான், "சிஎஸ்கே.. சிஎஸ்கே" என்று கோஷம் எழுப்பினார்.

இதனால் உடனிருந்த மகள் சுகானா, நடிகை அனன்யா பாண்டே உள்ளிட்டோரே ஆச்சரியமடைந்தனர். சிஎஸ்கே கோஷத்தை எழுப்பியதால் ரசிகர்களும் உற்சாகமடைந்து ஷாருக் கானுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கேகேஆர் அணி கோப்பையை வென்றாலும், சேப்பாக்கம் என்றுமே சிஎஸ்கே அணியின் கோட்டை என்று ரசிகர்கள் நிரூபித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் ஷாருக் கானின் செயல்பாடுகள் ரசிகர்களின் மரியாதையை பெற்று வருகிறது. ஷாருக் கான் "சிஎஸ்கே" என்று கோஷம் எழுப்பிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் ஒருமுறை தனியார் விருது விழாவில் கலந்து கொண்ட ஷாருக் கான், கேகேஆர் அனிக்கு பின் அதிகம் பிடித்த அணி என்றால் அது சிஎஸ்கே தான் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.