சென்னை : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய ஜெர்ஸி அந்த அணிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளதாக ரசிகர்களிடையே கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டில் வெற்றிபெறுவதற்கு வானிலை, மைதானம், வீரர்களின் திறமை, கேப்டன்சி ஆகியவற்றுடன் சேர்த்து கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. எந்தவொரு அணியையும் அந்த நாளில் எந்த அணியாலும் வெல்ல முடிவதற்கு இதுவும் காரணமாக இருக்கும். அந்த வகையில் தோனிக்கு பின் பேட் கம்மின்ஸ்-க்கு அதிகமாக அதிர்ஷ்டமும் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ், டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பை தொடர் என்று ஐசிசி தொடர்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் வென்று மிரட்டி இருக்கிறார் கம்மின்ஸ். தற்போது ஐதராபாத் அணியின் கேப்டனாக பொறுப்புக்கு வந்த முதல் சீசனிலேயே, அந்த அணியை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனால் பேட் கம்மின்ஸ் பக்கம் அதிர்ஷ்டம் இருப்பதாக ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் அணியின் ஜெர்ஸியும் அந்த அணிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்ட போது, பலரும் அந்த ஜெர்ஸியை கிண்டல் செய்து வந்தனர்.
ஆனால் இந்த சீசனில் புதிய ஜெர்ஸியுடன் ஐதராபாத் அணி விளையாடிய போது, வழக்கத்திற்கு மாறாக அதிகளவிலான ரசிகர்கள் ஆதரவை அளித்தனர். சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு பின் சொந்த மைதானத்தில் ஆரஞ்ச் ஆர்மியை கொண்டு முழுமையாக ஆடிய ஒரே அணி ஐதராபாத் அணி தான்.
ஏற்கனவே எஸ்ஏ20 லீக் தொடரில் இதே ஜெர்ஸியை அணிந்து தான் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கோப்பையை வென்றது. இதன் காரணமாகவே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் அதே ஜெர்ஸியை காவ்யா மாறன் அறிமுகம் செய்தார். இந்த ஜெர்ஸியை அணிந்து விளையாடிய முதல் சீசனிலேயே இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. இதனால் நிச்சயம் ஐதராபாத் அணி கோப்பையை வெல்லும் என்று கருதப்படுகிறது.