அகமதாபாத் : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் த்ரிப்பாட்டி ரன் அவுட்டானதை ஏற்க முடியாமல் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் பேசுபொருளாகியுள்ளது.
கேகேஆர் - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியை நேரில் காண ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் நேரில் வந்தார். வழக்கமாக நண்பர்களுடன் அமரும் காவ்யா மாறன், இந்த போட்டியின் போது தனியாக இருந்தார்.

ஐதராபாத் அணியின் ஆட்டத்திற்கு ஏற்ப காவ்யா மாறன் கொடுக்கும் ரியாக்சன்கள் சோசியல் மீடியாவில் வழக்கமாக ட்ரெண்டாகும். ஐதராபாத் அணியின் வெற்றியை கொண்டாடுவதை தோல்வியின் போது சோகமாக இருப்பார். கிட்டத்தட்ட ஒரு அணியின் உரிமையாளராக இருந்தாலும், சாதாரண ரசிகரை போலவே ஆட்டத்தை பார்ப்பார்.
இந்த போட்டியில் ஐதராபாத் அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, கிளாசன் - ராகுல் த்ரிப்பாட்டி கூட்டணி மீட்டெடுத்தது. சிறப்பாக ஆடிய கிளாசன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் ராகுல் த்ரிப்பாட்டி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்பின் வந்த அப்துல் சமாத்-ம் அதிரடியாக சில சிக்சர்களை அடிக்க, ஐதராபாத் அணியால் 200 ரன்களை எட்ட முடியும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் சுனில் நரைன் வீசிய 14வது ஓவரின் 2வது பந்தை அப்து சமாத் பாய்ண்ட் திசையில் தட்டிவிட்டார். அப்போது ஒரு ரன் எடுக்க அப்துல் சமாத் ஓட, திடீரென ரஸ்ஸல் அபாரமாக ஃபீல்டிங் செய்து பந்தை தடுத்து நிறுத்தினார். இதனால் ராகுல் த்ரிப்பாட்டி ரன் எடுக்க ஓடாமல் பாதியிலேயே நின்றார். ஆனால் அதனை கண்டும் காணாதது போல் அப்துல் சமாத் மறுமுனைக்கு ஓடி சென்றார்.
இதனால் ராகுல் த்ரிப்பாட்டி 55 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனை மைதானத்தில் இருந்து பார்த்த காவ்யா மாறன், கையை நீட்டி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கத்தி டென்ஷனை வெளிப்படுத்தினார். காவ்யா மாறன் டென்ஷனாகியது ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.