சென்னை : கேகேஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் பைனலில் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.
கடந்த ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ட்ராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். ட்ராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறியதே, சொந்த மண்ணில் உலகக்கோப்பை பைனல் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஏனென்றால் உலகக்கோப்பை பைனலை போல் மீண்டும் ஒரு அதிரடியான ஆட்டத்தை ஹெட் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் மிட்சல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசுவார் என்பதால், ட்ராவிஸ் ஹெட்டை பாதுகாக்கும் நோக்கில் அபிஷேக் சர்மா முதல் பந்தை எதிர்கொண்டார். அந்த ஓவரின் 5வது பந்தில் ஸ்டார்க் வீசிய அற்புதமான பந்தில் அபிஷேக் சர்மா போல்டாகி வெளியேறினார். கிட்டத்தட்ட ட்ராவிஸ் ஹெட்டை பாதுகாக்க அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை ஐதராபாத் அணி பலி கொடுத்ததாக பார்க்கப்பட்டது.
இதன்பின் 2வது ஓவரை வீச வைபவ் அரோரா அழைக்கப்பட்டார். மறுபக்கம் நட்சத்திர வீரர் ராகுல் த்ரிப்பாட்டி பேட்டிங் செய்ய வந்தார். முதல் 5 பந்துகளையும் ராகுல் த்ரிப்பாட்டியே எதிர்கொண்ட நிலையில், கடைசி பந்தை எதிர்கொள்ள ட்ராவிஸ் ஹெட் வந்தார். அந்த பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ட்ராவிஸ் ஹெட் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் ஐதராபாத் அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இரு நட்சத்திர தொடக்க வீரர்களும் 2 ஓவர்களுக்குள் வெளியேறியதால், ஐதராபாத் அணியின் ஓய்வறையே விரக்தியாக காணப்படுகிறது. இதனால் குவாலிஃபையர் முதல் போட்டி ரிப்பீட் ஆகுமா என்ற ரசிகர்கள் பேசி வருகின்றனர்.