அகமதாபாத் : கேகேஆர் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 4வது முறையாக கேகேஆர் அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. குவாலிஃபையர் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

கேகேஆர் அணி தரப்பில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 51 ரன்களும் சேர்த்தனர். இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் ஐதராபாத் அணி குவாலிஃபையர் 2வது போட்டியில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆரஞ்சு ஆர்மி ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், இந்த தோல்வியை விரைவில் கடந்து வர வேண்டும். பிளே ஆஃப் மூலமாக் நடந்த நல்ல விஷயம் என்னவென்றால், எங்களுக்கு 2வது வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் டி20 கிரிக்கெட்டில் நாம் என்ன செய்தாலும் அது சரியாக நடக்காது. டாஸ் வென்று பேட்டிங் செய்யும் போது, நாங்கள் நினைத்த ஸ்கோரை எடுக்க முடியவில்லை.
அதேபோல் பவுலிங்கின் போது பெரிதாக எதையும் செய்யவில்லை. இந்த பிட்சில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதேபோல் கேகேஆர் அணி மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார்கள். தொடக்கத்தில் பிட்சில் கொஞ்சம் பவுலர்களுக்கு உதவி கிடைத்தது. அதன்பின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக ரன்கள் சேர்க்க முடிந்தது என்று நினைக்கிறேன். அடுத்த வாய்ப்பு இருப்பதால், தோல்வியை எளிதாக கடக்க முடியும் என்று கருதுகிறேன்.
புதிய மைதானத்தில் மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். கூடுதலாக உழைக்க வேண்டிய தேவை உள்ளது. சன்விர் சிங் ஏற்கனவே ஒரு போட்டியில் ஆடினார். இம்பேக்ட் வீரராக உம்ரான் மாலிக்கை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்ததால், பேட்ஸ்மேனை களமிறக்கவில்லை என்று தெரிவித்தார். நாளை ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டியில் வெல்லும் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.